வெள்ளி, 19 ஜூன், 2015

மாதொரு பாகன்



எல்லோரும் கிழி கிழி  என்று  கிழிக்கிறார்களே அதில் என்ன தான் எழுதி இருக்கிறது என்று பார்க்கலாமே என்று மிகவும் முன் முயற்சி எடுத்து மாதொரு பாகன் நாவலை வாங்கினேன். தமிழில் கிடைக்கவில்லை. பெங்குவின் வெளியிட்டிருந்த ஆங்கில மொழியாக்கம் கிடைத்தது. அது குறித்து என் வினையாடல்கள் (!) வருமாறு:

  1. பிள்ளையில்லா தம்பதியினருக்கு சமுதாயம் கொடுக்கும் மன அழுத்தம் தாங்க முடியாமல் வருத்தத்தில் இருக்கும்போது இரண்டு வீட்டுப் பெரியவர்களும் சேர்ந்து கோவில் திருவிழாவில் பிற ஆடவனுடன் பிள்ளையில்லாப் பெண் கூடி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்கிற ஐதீகத்தைச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.கணவனுக்கு ஒப்புதல் இல்லை. கணவன் ஒப்புக் கொண்டது போல் நாடகமாடி அவன் மனைவியை சம்மதிக்க வைத்து விடுகிறார்கள். கடைசியில் கணவன் விஷயம் தெரிந்து மிகவும் விரக்தி அடைகிறான்.
  2. இதற்கு சாஸ்திர சம்மதம் இருக்கிறதா? சந்ததி இல்லாமல் இருக்கும் பெண்ணின் கணவன் சிறு வயதிலேயே இறந்து விட்டால் பெண் அவள் மைத்துனனிடம் கூடிப் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்கிறது மனு ஸ்ம்ருதி.
  3. சத்ய காம ஜாபாலன் கதை நினைவுக்கு வருகிறது. உத்தாலக ஆருணியிடம் தன பிள்ளை சத்யகாமனை ஜாபாலை வேதம் கற்க அனுப்புகிறாள். ரிஷி 'உன் கோத்ரம் என்ன?' என்று வினவ சத்யகாமன் தெரியாதென்கிறான். ரிஷி அன்னையிடம் போய்க் கேட்டு வருமாறு கூற அவள் 'நான் பல இடங்களில் வேலை செய்து வந்தேன்; அங்கெல்லாம் எனக்கு ஆண்களிடம தொடர்பு ஏற்பட்டதால் அதில் யாருக்கு நீ பிறந்த பிள்ளை என்று எனக்குத் தெரியவில்லை' என்று சொல்லி அனுப்ப ரிஷி 'நீ உண்மையைச் சொன்னதால் நீ வேதம் கற்கத் தகுதியானவன்; இனிமேல் உன் கோத்திரத்தை ஜாபாலி கோத்திரம் என்றே கூறிக்கொள்'  என்று வேதம் கற்றுத் தரச் சம்மதிக்கிறார்.
  4. த்ருதராஷ்ட்ரனும் பாண்டுவும் விதுரனும் வியாசருக்குப் பிறந்தவர்கள் தானே? பாண்டவ கௌரவ வம்ச வ்ருத்தி இப்படித் தானே உண்டாகி இருக்கிறது?
  5. இதை சொல்லும் போதே யாகத்தில் மிருகங்களைப் பலி கொடுப்பதும் பெண் மைத்துனனின் மூலமாகச்  சந்ததியை உண்டாக்கிக் கொள்வதும் தவறாகப் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளதால் கலியில் இவை விலக்கப் பட்டிருக்கின்றன என்றும் வேறு ஒரு சாஸ்திர சம்பந்தமான   புத்தகத்திலும் படித்த நினைவு.
  6. எப்படி இருப்பினும் மனித சமுதாயம் இப்படித்தான் வளர்ந்திருக்கிறது என்று ஒரு விஷயத்தை புரிந்து கொண்டால் ஒழிய இதைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியும் என்று தோன்றவில்லை.
  7. நில  உடமைச் சமூகத்தில் பரம்பரைச்  சொத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், செயற்கைக் கருத்தரிப்பு வழிகள் இல்லாத காலங்களில் இது போன்ற பிரச்சினைக்கு  இதைத் தவிர என்ன தீர்வு இருந்திருக்க முடியும் என்று தெரியவில்லை.
  8. இது போன்ற விஷயங்களில் இருந்து மனித சமுதாயம் வெகு தூரம் தள்ளி வந்து விட்டதினாலேயே இது போன்ற ஒரு விஷயம் எப்பவோ சமுதாயத்தில் இருந்திருக்காது  என்று நம்புவது அறிவீனம் என்று தோன்றுகிறது.
  9. பிராமண வீடுகளில் ஸ்ரார்த்ததின் போது 'என்மே மாதா ப்ரிதிர்லோம சரதி' என்று ஒரு மந்த்ரம் சொல்வதுண்டு. அதன் பொருள் 'ஒரு வேளை நான் இன்று வரிக்கும் தகப்பனுக்குப பிறக்காமல் வேறு ஒருவனுக்குப் பிறந்திருந்தாலும் நான் இன்று அளிக்கும் ஹவிசு என் ஒரிஜினல் தகப்பனைச் சேராமல் வரிக்கும் தகப்பனையே அடையட்டும்' என்பதாகும். இதே மந்த்ரத்தை பாட்டனாருக்கும் கொள்ளுப் பாட்டனாருக்கும் சொல்வார்கள்!
  10. இது போன்ற  விஷயங்களால் இந்த எதிர்ப்பு தேவை அற்றது என்பது தான் என் எண்ணம்.இதை விட மோசமான் நாவல்களை நான் படித்திருக்கிறேன். (சாரு நிவேதிதாவின் பான்சி பனியனும் எக்சிசடின்சியலிசமும் சுஜாதாவின் ஹாஸ்டல் தினங்கள்  போன்றவை).
  11. இப்போது நாவலுக்கு வருகிறேன்:
  • ஏதோ நிதி உதவி பெற்று பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இந்த நாவல் எழுதி இருக்கிறார் என்று சொல்கிறார்கள். இதில் ஆராய்ச்சியின் கூறுகள் எதுவுமே என் கண்ணில் படவில்லை.
  • இது போன்ற கதைகளை 'முடித்த எல்லைக் கதைகள்' என்பார்கள். க்ளைமாக்ஸ் என்ன என்று ஆரம்பத்திலேயே தெரிந்து விடும். கிட்டத் தட்ட மோடி மஸ்தான் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடுவது போன்றது தான் இதுவும்.
  • இரண்டு மூன்று அத்தியாயங்களிலேயே படிக்கும் வாசகனுக்கு பின்னால்  நாயகி வேறு ஒரு ஆடவனுடன் உடலுறவு கொள்ளப் போகிறாள் என்று தெரிந்து  விடுவதால் அதை 'எப்போ எப்போ' என்று மனம் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறது. இதை ஒரு சாமர்த்தியமான உத்தியாகக்  கதாசிரியர் கையாண்டு இந்த விஷயத்தைக் கடைசி  வரை நகர்த்திச் செல்கிறார். நாவல் முடியும் தருவாயில் குறிப்பிட்ட தருணம் வருகிறது.
  • அந்த இடத்தில் காமம் கிளர்ந்து படிக்கும் வாசகன்  அந்நிய ஆடவன் நாயகிக்குப் புட்டு ஊட்டும் தருணத்தில் உச்சகட்ட மனக் கிளர்ச்சியை அடைகிறான். அந்த இடத்தில் புட்டு ஊட்டுகின்ற தருணம் உடலுறவு விவரிக்கப் பட்டால் என்ன கிளர்ச்சியை ஏற்ப்படுத்துமோ அதே கிளர்ச்சியை எற்படுத்துகிறது.
  • அந்தக் காலத்தில் குமுதத்தில் எழுதிய ஹேமா ஆனந்த தீர்த்தனுக்கும் இந்தக் கதாசிரியர்க்கும் எந்த வித்யாசமும் எனக்குத் தெரியவில்லை.
  • மேற்கூறிய காரணங்களால் இந்த நாவல் தடை செய்யப் படவேண்டிய நாவல் இல்லை ஆயினும் உதாசீனப் படுத்தப் படவேண்டிய நாவல் என்று தோன்றுகிறது.

செவ்வாய், 9 ஜூன், 2015

ஜெயமோகன்


தற்செயலாக ஜெயமோகன் என்கிற எழுத்தாளரின் வலைப்பூவை வாசிக்க நேர்ந்தது.  படிக்கப் படிக்க இவ்வளவு சான்றாண்மை, மரபுத் தோய்வு, ஆன்மிகத் தேடல், நேர்மை  மற்றும் நுண் மாண் நுழை புலம் உள்ள எழுத்தாளர் ஒருவர் தமிழில் இருக்கிறார் என்று அறிந்து  பிரமித்துப் போகிறேன். என்ன உழைப்பு! என்ன படிப்பு! என்ன தெளிவு! என்ன தீர்மானம்! ஜெயகாந்தனுக்குப் பிறகு நான் பார்த்து வியக்கும் ஒரு பெரிய எழுத்தாளர் இவர் தாம். இவர் சமீபத்தில் மின் அஞ்சல்களுக்கு பதில் எழுதாததற்காக மன்னிப்புக் கேட்டிருந்தார். அதற்கு பதிலாய் நான் அவருக்கு ஒரு மடல் அனுப்பி இருந்தேன். அதில் அவரைப் பாராட்டி ஒரு அஞ்சல் அனுப்பி இருந்தேன். கூச்ச உணர்வினாலோ அல்லது முகஸ்துதி செய்கிறேன் என்று நினைத்தோ என்னவோ  அவர் அதைத் தன வலைப்பூவில் வெளியிடவில்லை. எனக்கு என்ன தோன்றுகிறது  என்றால் என் தற்போதைய மயக்கம் பின்னாளில் தெளிந்து போகலாம்.  அவர் குறித்த என் அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ள நேரலாம். அதற்காக நான் அவரைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறேன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அதற்காக  நான் அவருக்கு எழுதிய அஞ்சலை இங்கு வெளியிடுகிறேன். அவரைப் போன்ற ஒரு அறிவு ஜீவியை ஆதரிப்பது தமிழ்ச் சமுதாயத்தின் கடமை:

அன்பு ஜெயமோகன்,

மன்னிப்பா? யாரிடம் யார் மன்னிப்புக் கேட்பது? தங்களின் வலைப்பூவில் ஒரு சதம் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இப்பவே உங்களை அண்ணாந்தாவது பார்க்க முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. என் போன்ற வாசகனிடமா மன்னிப்பு? வேறு வேலையைப் பாருங்க.
என்னைப் பொருத்தமட்டில் உங்களுக்கு எது முக்கியமென்று படுகிறதோ அதை மட்டும் செய்யவும். பிற வேலைகளைப் பிரித்துக் கொடுத்து விடவும். குறிப்பாகப்  பாராட்டு மடல்கள். (என் மடலையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்).
உங்களுக்கு மறதி சின்னச்சின்ன விஷயங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். எனக்கென்னவோ சுகப் பிரம்மம் மாதிரி மோன நிலையை நீங்கள் அடைந்து கொண்டிருப்பதாகப் படுகிறது. நீங்கள் முக்கியமென்று கருதும் விஷயங்களில் ஓர்மை அடைந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. இதில் சந்தோஷப் படுவதற்குத் தான் நிறைய இருக்கிறது.
ஜெயகாந்தன் இறந்தபோது 'ஐயோ ஜெயகாந்தன்' போய்  விட்டாரே' என்று இடிந்து போனேன். இத்தனைக்கும் அவர் சமீபங்களில் எழுதுவது, பேசுவது ஒன்றுமே செய்யாமல் இருந்தார். உங்கள் வலையில் மாட்டிக் கொண்ட பிறகு இப்போது என்ன தோன்றுகிறது என்றால் ' ஜெயகாந்தன் வயதாகித் தானே இறந்தார்; பரவாயில்லை. இனிமேல் ஜெயமோகன் பார்த்துக் கொள்வார்' என்று தான். ஜெயகாந்தனைபற்றிய ஒரு கட்டுரையில் 'எந்தரோ மகானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு' என்று குறிப்பிட்டிருந்தேன். அதே வார்த்தையைத்தான் உங்களைப் பற்றி நினைக்கும் போதும் குறிப்பிட வேண்டி இருக்கிறது.
தமிழில் மூன்று  பேருக்குத் தான் ' மஹாமஹோபாத்யாய' பட்டம் வழங்கப் பட்டுள்ளது. ம வ ராமனுஜாச்சரியார், உ வே சாமிநாத ஐயர், பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஆகிய மூவர் தாம் அவர். நான்காவதாக நான் தங்களுக்கு இன்று 'மஹாமஹோபாத்யாய' பட்டம் வழங்குகிறேன்.
கே வி மகாதேவன் இசை அமைத்துக் கேட்டிருப்பீர்கள். பாடிக் கேட்டிருக்கிறீர்கள? இதோ அதைக்  கேளுங்கள்:


கிட்டத் தட்ட திருச்சி லோகநாதன் குரல். கண்ணாய் என்கிற இடத்தில் அவரும் பி  லீலாவும் போடும் பிருகாவைக் கவனியுங்கள்!

அன்புடன்,

அஸ்வத் "

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...