புதன், 6 செப்டம்பர், 2017

வாட்சப் III


இப்படிப் பட்ட சந்தர்ப்பத்தில் நானும் காதலாய் ஒரு குழுமத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.எல்லாம் ஆருயிர் நண்பர்கள். பலதரப் பட்டவர்கள். இரண்டு  மூன்று கணக்காயர்கள். இரண்டு மூன்று வக்கீல்கள். பேராசிரியர் ஒருவர். விஞ்ஞானி ஒருவர். சர்வதேச விற்பனைத் தலைவர் ஒருவர். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.
வழக்கமான வாழ்த்துச் செய்திகள், விடியோக்கள், சாமி படங்கள், கர்ப்பகிருஹத்தில் ஆசிர்வதிக்கும் நல்ல பாம்பு போன்ற வினோத சம்பவங்கள், வேலைக்காரியுடன் கள்ள உறவு மற்றும் மனைவி புடவையைத் தோய்ப்பது போன்ற சாகா வரம் பெற்ற ஜோக்குகள் இத்யாதி இத்யாதி.......
இதில் ஒரு குறிப்பிட்ட வகை  அடக்கம். அது ஒரு பொது எதிரியைக் கண்டு பிடிப்பது.பொது எதிரி குழுவுக்கு குழு மாறுபடும். ஒரே குழுமத்தில் கூட இரண்டு மூன்று எதிர் எதிர் நிலைகள் இருக்கலாம். அது ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்குப் பின் புரிந்து விடுமாதலால் ஒருவருக்கொருவர் ரொம்ப சண்டையில்லாமல் மழுப்பி விடுவார்கள். இதையும் மீறி எல்லாருக்கும் பொது எதிரிகள் சிலர் உண்டு. அவர்கள் பட்டியல் வருமாறு:
1. அரசியல் வாதிகள்.
2. போலீஸ்காரர்கள்.
3. அரசு ஊழியர்கள்.
4. பொதுத் துறை ஊழியர்கள்.
5. சினிமாப் பிரபலங்கள்.
6. போலிச்   சாமியார்கள்.

இவர்களைப் பற்றி யாராவது செய்தி அல்லது விமர்சனம் போடுவது தான் தாமதம். எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு வந்து தர்ம அடி போட ஆரம்பிப்பார்கள். அந்த நபரை அல்லது பிரபலத்தை குற்றுயிரும் குலை உயிருமாக்கி விட்டுத் தான் ஓய்வார்கள். சவூதி அரேபியாவில் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை  நினைவுக்கு வருகிறது. ஒரு முறை அதில் சம்பந்தமே இல்லாமல் வேடிக்கை பார்க்க வந்திருந்த வெள்ளைக் காரர்கள் ஓரிரண்டு  பேர் வெறியுடன் கல்லால் அடிக்க இணைந்து கொண்டதை பற்றிய சுஜாதாவின் குறிப்பு நினைவுக்கு வருகிறது.
ஒரு நண்பர் வங்கி ஊழியரைப் பற்றி எப்போதுமே மனத்தாங்கலாகப் பேசிக் கொண்டிருப்பார். அவரின் மனைவி
வங்கி ஊழியர். நண்பருக்கு அவர் மேல் இருந்த கோபம் அவர் சம்பந்தப் பட்ட எல்லார் மீதும் வந்தது. இன்னொருவர் ஆச்சரியப் படத்தக்க வகையில் வாழ்க்கையில் பெரும் வெற்றிகளை அடைந்தவர். அதனாலேயோ  என்னவோ சுமாரானவர்களைத் துச்சமாக எண்ணுபவர். வேறொரு நண்பர் இந்திய பொதுத் துறை வங்கியின் பெண்மணி ஒருவர் பணம் எண்ணும் பாங்கைப் போட்டு அத்துடன் சீனக்காரி ஒருத்தி பணம் என்னும் லாவகத்தையும் காண்பித்து நக்கல் அடித்திருந்தார். வந்தது வினை! ஆளாளுக்கு ஆரம்பித்து விட்டார்கள். கூடவே என் பெயரைப் போட்டு அவனைச் சொல்லவில்லை என்று துறப்பு அறிக்கை வேறு. நான் வங்கி ஊழியன் என்பதால் ஏற்கெனவே இது போன்ற ஒரு விவாதத்துக்கு எதிர் வினை ஆற்றி இருந்தேன். இவர்கள் கூறிய எல்லா வாதங்களுக்கும் என் மனதில் எதிர் வாதங்கள் எழுந்து கொண்டிருந்தன. ஆனால் தேவையா என்று யோசித்தேன். எல்லாரும் உயிர் நண்பர்கள்.என் மீது அன்பு செலுத்துகிறவர்கள். பதிலும் சொல்லக் கூடாது; சமயத்தில் என் தொழிலை பற்றிய தாழ்வான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்க இந்த வயதில் அவசியமும் இல்லை.
குழுவிலிருந்து சத்தம் போடாமல் வெளியேறி விட்டேன்.

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...