சமீபத்திய நான்கு நிகழ்வுகள்-சில பதிவுகள் IV
வர்தா புயல் தந்த செல்வம் பன்னீர் செல்வம்! பெரிய ஆல மரத்தின் கீழ் செடி கொடிகள் வளராது என்பார்கள். பெரிய ஆலமரம் வேரற்றுச் சாயும் போது அடியில் சில செடிகள் துளிர் விடும் போலும். சென்ற வருடப் பெரு மழையின் போது விளைந்த கோர தாண்டவத்தை தொலைக் காட்சி ஊடகங்களுடன் சேர்ந்து அரசும் வேடிக்கை பார்த்தது. அதன் வீச்சை எதிர் கொள்ள முடியாது அரசு எந்திரம் ஸ்தம்பித்தது. கட்சிக்காரர்கள் விளம்பரத்திலும் வாக்கு வாதங்களிலும் காட்டிய முனைப்பை நிவாரணப் பணிகளில் காட்டவில்லை. இரண்டு காரணங்கள் இருந்திருக்க முடியும். அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலையில் சுதந்திரம் கொடுக்கப் படவில்லை என்று நினைக்கும் அளவிற்கு இருந்த மேலிடக் கட்டுப்பாடுகள். என்ன செயலின்மை இருந்தாலும் அம்மாவின் செல்வாக்கு அதனை ஈடு செய்து விடும் என்கிற மெத்தனம். இதை மீறி முதன் முதலாகத் தனக்கு கிடைத்த வாய்ப்பை இந்த முறை பன்னீர் நன்கு பயன் படுத்திக்க கொண்டார் என்றே சொல்லவேண்டும். கச்சிதமான முன்னேற்பாடுகளுடன் ஆரவாரமில்லாமல் புயலைத் தமிழகம் எதிர் கொண்டதற்கு திரு.ஓ பன்னீர் செல்வம் முக்கிய காரணம் என்று சொல்ல வேண்ட...