தொல்வெளியிலிருந்து தொடரும் இசை தொடர் குறித்து சொல்வனத்தின் மதிப்புரை
அஸ்வத் எழுதிய ‘தொல்வெளியிலிருந்து ஓர் இசை’ – கட்டுரைத் தொடர் முடிவு குறித்து: தமிழிலக்கியத்தில் முற்றிலும் புது வகைக் கருத்துகள், சிந்தனைகளைக் கொடுக்கும் பல கட்டுரைத் தொடர்களைச் சொல்வனம் வெளியிட்டு இருக்கிறது. இவை எவை போலவும் இல்லாத ஒரு அபூர்வமான கட்டுரைத் தொடர் அஸ்வத் நாராயணன் எழுதிய ‘தொல்வெளியிலிருந்து ஓர் இசை’ என்பது. இதை எப்படி வகை பிரிப்பது என்று துவக்கத்திலிருந்து இறுதி வரை எங்களுக்கு ஓர் முடிவின்மைதான் இருந்திருக்கிறது. இது கர்நாடக இசை பற்றியது, ஒரு இளம் மேதை பற்றியது, சிறுவனாக இருந்ததிலிருந்து இளைஞனாக வளர்ந்த நிலை வரை ஓர் இளம் ஜீவன் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது, இன்னும் சிறிது அவலச் சுவை வேண்டுமெனில் நம் கலைப் பரப்பில் என்னென்ன விதமான கசப்புகள் நிலவுகின்றன என்றும் சுட்டுவதாகவும் இதை நாம் பார்க்கலாம். ஒரே நேரம் பண்டை உலகத்தின் சுவடுகளை இன்றும் சுமந்திருக்கும் நம் பண்பாடு, கலை, சிந்தனை வெளியிலும் சஞ்சரித்து, இன்றைய பெருநகரங்களின் கடுமை நிறைந்த வெளியிலும் உலவி, அரூபமான கலையின் நுட்பங்களிலும் திளைத்து வந்திருக்கிற கட்டுரை இது. கட்டுரையாள...