தொல்வெளியிலிருந்து தொடரும் இசை VI
அத்தியாயம் 22 “நீங்க பாண்டிச்சேரி ஊரில்லையோ?” என்றார் பெரிய இசைவாணர். எங்களை எப்போது பார்த்தாலும் எங்களை அவர் இந்தக் கேள்வி கேட்பது வழக்கம். நாங்கள் எவ்வளவு முறை எங்களுக்குப் பாண்டிச்சேரி பூர்வீகம் கிடையாதென்றும் என் வேலை நிமித்தமாக நாங்கள் அங்கு சென்றிருந்தோம் என்றும் கூறியிருந்தாலும் அவர் மனதில் சுத்தமாகப் பதிவாகவில்லை. எங்களை எப்போது பார்த்தாலும் எங்களை அவர் இந்தக் கேள்வி கேட்டு விடுவார். எங்களையும் பாண்டிச்சேரியையும் ஒன்றாக மனதில் உறைய வைத்திருந்தார் அவர். என்ன முயன்றும் அதை அவர் மனதிலிருந்து இளக்க முடியவில்லை. இசைவாணருக்கும் பெரிய இசை வாணருக்கும் ஒப்புமை நோக்கும் போது பெரிய இசைவாணரை இன்னமும் சாத்வீகமானவர் என்று தான் சொல்ல வேண்டும். மழலை மேதை என்று அறியப் பட்டிருந்ததாலோ என்னவோ இசைவாணரிடம் இருந்த வித்தை போதாமை உணர்வு இவரிடம் கிடையாது. பெரிய சங்கீத விற்பன்னர் என்றும், வாக்கேயக்காரர் என்றும் அறியப்படுபவர் ஆதலால் தன் வித்தையைப் பற்றிய தன்னம்பிக்கையின்மையோ தாழ்வு மனப்பான்மையோ இவரிடம் கிடையாது என்பதே உண்மை. ஆரம்ப நாட்களில் இவர் ஆதித்யாவைத் தன் பிள்ளை போலவே நடத்தி வந்தார். ஒரு முறை ...