திங்கள், 29 மே, 2017

ரஜினிகாந்தின் அரசியல்

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சூடாக தொலைக்காட்சியில் விவாதங்கள் நடந்து வந்து இப்போது சற்று ஓய்ந்திருக்கிறது.மத்திய அரசு மாட்டிறைச்சித் தடைக்கு சுற்றறிக்கை அனுப்பியதும் கவனம் திரும்பி விட்டது. இப்போது இந்துத்துவாவிலிருந்து கைபர் கணவாய் வரை சந்திக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரஜினி அவ்வப்போது இந்த வெடியைக் கொளுத்தி விட்டுப் போகிறது வழக்கம் தான் என்பதால் ஆச்சர்யப் பட எதுவும் இல்லை தான்.
ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வரும் வாய்ப்பு இல்லை என்று தான் தோன்றுகிறது. இது போன்ற அறிவிப்புகளை அவர் தன்  படம் வெளிவரும் சமயம் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகத் திட்டம் போட்டுச் செய்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுவது பிழை என்றும் இதை அவரின் முடிவெடுக்க முடியாத நிச்சயமற்ற தன்மை என்றும் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியலுக்கு வர விரும்பும் ஒருவர் முப்பது வருடங்களாக ஆண்டவனிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க மாட்டார். 
மாறாக அவர் முடிவு எடுத்து விட்டதாகக் கருதலாம். ஆனால் அதில் அவரின் எதிர்பார்ப்பாக தோன்றுவதெல்லாம்-
தன் முக்கியத்துவம் குறைந்து விடக்  கூடாது.
கட்சியில் உள்ளவர்கள் ஊழல் செய்து விடக்கூடாது.
ஊழல் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து விட கூடாது.
கட்சியில் இருப்பவர்கள் பணம் சம்பாதிக்க அவரின் செல்வாக்கைப் பயன் படுத்தக் கூடாது.
எப்போ அலை ஓய்வது? எப்போ குளிப்பது?
மற்றவர்களுக்கு இல்லாத எந்தத் தகுதி ரஜினிக்கு இருக்கிறது? அவர் சினிமா நடிகர் என்கிற ஒரே தகுதி தான். 'கரிஷ்மா' உள்ள நடிகர் அதுவும். இது இருந்து விட்டால் ஜாதி, மொழி, மத, குழு, இன வாதங்கள் எல்லாம் அடி பட்டுப் போகின்றன. இது தமிழ் நாட்டின் பிரத்யேக நிலை. இதன் உளவியல் காரணங்களை நாம் மன்னன் மீதுள்ள பிரேமையால் தன் தலையை வெட்டி பலி பீடத்தில் வைக்கும் தொல்குடி இளைஞனின் மரபில் தான் தேட வேண்டும். இது ரஜினிக்குப் புரிந்திருப்பது போலவே இவரை எதிர்க்கும் அரசியல்வாதிகளுக்குப் புரிந்திருக்கிறது. இலவு காத்த கிளிகள் போல் அவர்களெல்லாம் பல வருடங்களாக கத்திக் கொண்டு முதல்வர் ஆகும் கனவுடன் காத்திருக்க இடையில் வரும் ஒருவர் அதைத் தட்டிக் கொண்டு ஓடி விடப்  போகிறாரே என்று பயப்படுகிறார்கள். ஏனையோர் ரஜினியின் செல்வாக்கை வைத்து தங்கள் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வரமுடியுமா என்று ஏங்குகிறார்கள்.
சினிமா நடிகர்கள் இப்படிக்கு கோலோச்சுவது பாகவதர் காலத்தில் இருந்து நடந்து வருகிறது தான். ரஜினி பக்கத்தில் உட்காரும் உரிமை கமலஹாசனுக்கு மட்டும் உண்டு என்றும் மற்றவர்களுக்கு அது கிடையாது என்றும் சொல்கிறார்கள். இது போன்ற சட்ட திட்டங்கள் எம்ஜியார் சிவாஜி காலத்திலும் உண்டு. முன்னால் சிகரெட் பிடிக்கக்கூடாது உட்காரக்கூடாது என்று ஏகப்பட்ட எழுதப்படா விதிகள். இந்த சூழலில் இருந்து வரும் ஒருவர் எப்படி மக்களின் தேவைகளைக் கலந்து பழகாமல் உணர்ந்து கொள்ள முடியும்? முதன் முறையாக முதல்வர் ஆன பின்பு கூட்டப் பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் போதுமான இருக்கைகள் போதாத நிலையில் 'மிஸ்டர். இராமச்சந்திரன்! பத்திரிக்கையாளர் என்றால் நாற்காலிக்கு கூட அருகதை இல்லாதவர்கள் என்று நினைக்கிறீர்களா?' என்று ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கேட்டதில் எம்ஜியார் விதிர் விதிர்த்துப் போனார் என்பார்கள். அது வரை எம்ஜியார் சந்தித்திராதது இது. இது போன்ற நடைமுறை வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தன்னை தயார் படுத்திக்கொண்டார் எம்ஜியார். இத்தனைக்கும் ஜெயகாந்தன் எழுதிய 'சினிமாவுக்குப் போன சித்தாளு'வைப் படித்த எம்ஜியார் 'நடக்கிறதைத் தானே எழுதி இருக்கார் அந்த ஆளு' என்று விட்டு விட்டாராம் ஜெயகாந்தன் தன்னைத் தான் கடுமையாக விமர்சிக்கிறார் என்று உணர்ந்தும் கூட!
தனி நபர்கள் இது போன்ற முக்கியத்துவம் ஏன் பெறுகிறார்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் யோசிக்கத் தோன்றுகிறது. பாடுவதற்கு இரவல் குரல், ஆடுவதற்கு டான்ஸ் மாஸ்டரின் பயிற்சி, சண்டை போட ஸ்டண்ட் மாஸ்டரின் பயிற்சி, தவிர சினிமாவுக்குள்ள பறந்து பறந்து அடிப்பது போன்ற தந்திரங்கள் இவை மூலம் ஒரு சூப்பர் மனிதனை சினிமா ஸ்ருஷ்டிக்கிறது. இதை வைத்து இவர்கள் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாது மக்களின் வாழ்க்கையிலும் அரசிலும் கோலோச்ச முயலுகிறார்கள். காரணம் நாளாக நாளாக சினிமா தன்னைப்  பற்றி கட்டமைத்திருக்கிற பிம்பம் உண்மை என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள். இப்படிப் பார்க்கும் போது இவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்று தான் தோன்றுகிறது.
முடிவாக-
ரஜினி முதல்வராக வேண்டும் என்று நினைத்தால் அதில் பெரிய தவறேதும் காண முடியாது. சட்டப் படியும் தார்மீக நெறிப் படியும் ஒன்றும் தவறில்லை தான்.
ஆனால்-
மாநில முதல்வரை சாதாரண மனிதன் சந்திக்க முடியாத நிலை தொடரும். மாட்சிமை இல்லாத அதிகார மையங்கள் இப்போது போல் கோலோச்சிக் கொண்டிருக்கும். கடைக் கோடி மனிதனின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது.

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

ஜோக்கர்

நேற்று டெல்லி தமிழ் சங்க நூலகத்திற்கு இரவல் புத்தகம் மாற்றுவதற்காகச் சென்றேன். தற்செயலாக ஜோக்கர் திரைப் படம் திரையிடுகிறார்கள் என்கிற அறிவிப்பைப் பார்க்க நேர்ந்தது. பெரிதாகச் செய்ய ஒன்றுமில்லையாதலால் படத்தைப் பார்த்து வைப்போமே என்று போய் அரங்கில் உட்கார்ந்தேன். இந்தப் படம் இயக்கிய தம்பி ராஜு முருகனின் 'வட்டியும் முதலும்' என்கிற புத்தகத்தை ஏற்கெனவே படித்திருந்தேன் என்பதால் அவர் மீது மதிப்பிருந்தது. தவிரவும் இப்படம் சமீபத்தில் தேசிய விருது வாங்கி இருந்த அறிவிப்பை பார்த்த ஞாபகம். தம்பியின் வட்டியும் முதலும் என்கிற புத்தகம் நடைச்  சித்திரம் வரிசையில் வந்தது. அருமையான பதிவுகள் உள்ள குறிப்பிடத்  தகுந்த படைப்பு. அதில் வருகின்ற மாந்தர்கள் இன்னும் என் நினைவில் உலா வருகின்றனர். குறிப்பாக மனைவி இன்னொருவனைக் காதலித்து அவனுடன் ஓடிப் போன பின்பும் அவளை மன்னித்து காதலனுடன் வாழ அனுமதித்த திருநா அண்ணன். இது நிற்க.
படத்தைப் பொறுத்தவரை நேரடியாக அழுத்தமான செய்தி சொல்லும் படமாகத் தெரிந்தது. அதிகார வர்க்கத்தினரும் ஆளும் கட்சிகளும் செய்யும் அராஜகங்களுக்கு சவுக்கடி கொடுக்கிறது படம். குறிப்பாக மோடியின் சுத்தம் இந்தியா திட்டத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. தம்பியின் மார்க்சிய சார்பை என்னால் முன்பே உய்த்துணர முடிந்ததால் இது குறித்துப் பெரிய ஆச்சர்யம் எனக்கேதும் இல்லை. ஆனால் இவ்வளவு பிரச்சார நெடி தேவை தானா  என்று எனக்குத் தோன்றியது.
ஹீரோ காதலிக்கும் பெண் கழிப்பறை இல்லாத வீடுள்ளவனைக் கல்யாணம் செய்யத் தயங்குவதால் முன் முயற்சி எடுத்து அரசு உதவியுடன் கழிப்பறையை கட்ட முயல்கிறார். அரசு அலட்சியத்தினால் அரை குறையாகக் கட்டப்பட்ட அறை மழையில் கரைந்து கர்ப்பஸ்திரீயான மனைவியின் மேல் சரிகிறது. வயிற்றில் பிள்ளை இறக்க மனைவியும் கோமாவில் ஆழ்ந்து விடுகிறார். கணவன் பைத்தியமாகிறான். தான் தான் இந்திய ஜனாதிபதி என்று பிரகடனப் படுத்திக் கொண்டு சமூக பிரச்னைகளில் பங்கெடுக்கிறான். சமூக ஆர்வலர் ஒருவரும் அவனுக்குத் துணை. மனைவி கருணைக் கொலைக்கு மனு செயகிறான். மணல் கொள்ளையை எதிர்க்கிறான். கருணைக் கொலை மீதான மனு உச்ச நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட ஹீரோவை மணல் கொள்ளையர் லாரி ஏற்றிக் கொல்கிறார்கள்.சமூக ஆர்வலர் தகுதி இல்லாத தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் நம்மைக் குற்றம் சொல்வதுடன் முடிகிறது கதை.
மனம் ஒப்பாமல் அவ்வப் போது விமர்சனங்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன் படத்தை. கதை ஜெயமோகன் எழுதியுள்ள கோட்டி என்கிற கதையை நினைவு படுத்துகிறது. கிட்டத்தட்ட வழிகாட்டியாக வருபவராக பவா செல்லதுரை வேடம் ஏற்று நடித்திருக்கிறார். அவரின் கதா  பாத்திரத்தையும் பாதியில் கொன்றுவிடுகிறார்கள்.
மார்க்சிஸ்டுகளின் எளிய அரசியல் தான் இது. ஆனால் இரு நூறு வருடங்களாக வளர்ந்து நிலைக்களன் கொண்டுள்ள இந்திய அரசின்   ஆட்சி அதிகாரத்தையும்  குடிமை முறைகளையும் இது போல் கடுமையான விமர்சனத்திற்க்குள்ளாக்குவது ஏற்புடையது தானா?
ஆள்பவர்கள்  சரியில்லைதான். அரசு அலுவலகத்தில் நூறு ரூபாய் லஞ்சம் வாங்குகிறவனைக் கையும் களவுமாகப் பிடித்து இரண்டு வருடங்கள் கடுங்காவல் கொடுக்கிறது அமைப்பு. நூறு கோடி பணம் திருடுகிறவர்கள் தொலைக் காட்சியில் சிரித்துக் கொண்டே வருகிறார்கள். இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது நம் சமூக அமைப்பு.
ஆனால்...
கோடிக்  கணக்கில் திருடுகிறவர்கள் வானத்தில் இருந்தா குதித்து வருகிறார்கள்? அவர்களும் நம்மில் இருந்து தான் வருகிறார்கள். என்னால் இப்படித் தான் இதைப் பார்க்க முடிகிறது. இதனாலேயே மஹாத்மா சொன்ன மாதிரி 'புரட்சி செய்ய வேண்டுமென்றால் அதை முதலில் உன்னிலிருந்து தொடங்கு' என்கிற ஒற்றை வாக்கியத்தை நாம் தாரக மந்திரமாகக் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது.
படத்திலும் இதே குறை தான். தவிரவும் அனுபவங்கள் நேரடியாகத் தோய்வு இல்லாமல் மொத்தையாகத் தரப் பட்டுள்ளன. மேலாண்மை பொன்னுச்  சாமியின்  சிறுகதையைப் படிப்பது போலிருக்கிறது. பாடல்கள் ஒரே இழுவை.
நோக்கமெல்லாம் சரிதான். தம்பி கதை சொல்லுவதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

அஸ்வத் 30.4.2017

பின் குறிப்பு: சமூக ஆர்வலருக்கு டப்பிங் பேசிய குரலை எங்கோ கேட்டுருக்கிறோம் என்று இரண்டு நாளாக யோசனை செய்து கொண்டிருந்தேன். இன்று விடியற்காலை அது கம்பர் ஜெயராமனின் குரல் என்று நினைவுப் படலத்தில் ஒரு மின்னல் அடித்தது. அற்புதமான நடிகர்.  ஏன்அவரையே அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைக்காமல் டப்பிங் மட்டும் பேச வைத்தார்கள் என்று தெரியவில்லை.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

ஒரு இசைக் கலைஞனின் இசைப் பயணம் II



Apr 12 2017 : The Times of India (Chennai) It is the love for music which keeps Aditya going



When Aditya Mohan was a toddler, he could feel no emotion. His mother, Jayashri, says, “I am not sure if he recognised that I was his mother. He couldn't converse, didn't feel a thing and was extremely restless because he was an autistic child.“ But today, the 24-year-old can sing an hour-long concert and can connect with people.And the family has only God and music to thank for this.“He is a musical genius and I am not saying this because he is my son. Right from the time when he was six months old, he used to hum and sing. He was born with the gift of music. We belong to a musical family -both my husband and I sing. Whenever we would be free, we would sing to him. But when we stopped, he would become so restless.Only music calmed him down. So, it didn't take us extra efforts to realise his inclination towards music,“ shares Jayashri. Aditya had started identifying ragas when he was two years old. The family was in Mumbai for a few years, when Aditya surprised his parents one fine day. Jayashri says, “My husband was attending music classes in Shanmukhananda Hall in Mumbai and we had taken Aditya along. The music teacher played a raga on the veena and he immediately sang the aarohanam and identified the raga to be Bhairavi. So, my husband started practising the sahityams and he would tell the swaras. They would do this the whole day just to keep him occupied,“ Jayashri recollects.
When Aditya was three, Pretti Sagar's nursery rhymes were his best friend. He would listen to them, try and sing along with it. When it came to academics, he comprehended things differently. “He used to start from Z and end with A. His numbers were also from the opposite. But he always wanted to learn something new.He constantly needed inputs so he could apply his brains and learn. We spent a lot of time teaching him new things because keeping him occupied was our biggest task,“ shares Jayashri, who shifted with her husband Mohan to Chennai six years ago. Aditya was not cut out for music classes when he had to get to the next step in music. His first concert was when he was 11. “We thought we will arrange a concert and see what he does. He delivered it successfully giving us a sweet surprise,“ she smiles. Since then, Aditya has given several concerts in different temples. Jayashri is all praise for AVK Rajasimhan, Aditya's teacher. “Only he could understand my son properly. After four classes, he asked me how does Aditya know the kalpana so well? He is a musical genius, and since March 2017, Aditya has been singing at sabhas. His first was at Sri Krishna Gana Sabha. We never dreamt of him singing in a concert hall, with renowned musicians. But today, sabhas are coming forward and asking him to sing,“ says the proud mother. Children with autism, generally, have behavioural problems. They are erratic and need therapy. “We have never put any kind of pressure on Aditya to perform in front of the audience. We had no expectations from him either. We would take him to the beach and ask him to sing to the waves. It was purely his interest in music.He was never inclined towards meeting people or socialising. I think that helped him concentrate better on music. It is the negative aspects which, I guess, helped him succeed,“ she signs off.

ஒரு இசைக் கலைஞனின் இசைப் பயணம்


சனி, 25 மார்ச், 2017

அசோகமித்ரன் மறைந்தார்

தமிழின் முது பெரும் எழுத்தாளர் அசோகமித்ரன் மறைந்தார். ஓடும் நதியைப் பார்த்துக்கொண்டே கை  மணலை உதிர்த்துக் கொண்டிருக்கும் சிறுவனின் செயல் போன்றது தான் இலக்கியம் என்று நான் நினைத்துக் கொள்வது வழக்கம். இந்த உதாரணத்துக்கு மிகவும் பொருத்தமானவர் அசோகமித்திரன்.கிட்டத்தட்ட வாழ்க்கையின் சகல கூறுகளையும் பூடகத்தன்மையுன் அலசிய எழுத்து. கூர்ந்து நோக்கினால் மட்டுமே வேறு சில பரிமாணங்கள் தெரியக்கூடிய உரத்த குரலற்ற விருப்பு வெறுப்பற்ற நோக்கில் எழுதியவர்.  இவர் எழுதிய புதினங்களாகட்டும் சிறுகதைகளாகட்டும் எடுத்து கொண்ட விஷயம் ஒன்றாகவும் தொக்கி நிற்பது வேறொன்றாகவும் இருந்ததால் இவரை எந்த வகையில் சேர்ப்பது என்று பலரும் தடுமாறினார்கள்.
'புலிக்கலைஞன்' என்கிற சிறுகதையை மட்டும் முற்போக்காளர்கள் பாராட்டுவார்கள். மற்ற படைப்புகளை எப்போதும் கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். எனக்கு அந்த நாட்களில் அன்புக்குரியவராக இருந்த ஒரு முற்போக்கு எழுத்தாளர் 'அவர் உடம்பு மிகவும் பூஞ்சை ; அவர் எழுத்தும் அப்படித்தான் இருக்கும்' என்றார் . ஒரு பெரிய கூட்டம் சுற்றி. எல்லோரும் சிரித்தார்கள். நான் சொன்னேன் : 'நீங்கள் சொல்கிறபடி இருந்தால் தாராசிங் தான் நல்ல இலக்கியம் படைக்க முடியும்'. அதற்கும் கூட்டம் சிரித்தது.
தவறாகவும் புரிந்து கொள்ளப் பட்டவர் அசோகமித்திரன். 'தண்ணீரி'ல் பெருநகரத்து தண்ணீர் பிரச்சினையைப்  பற்றித்தான் எழுதுகிறார் என்று தோன்றும். இதே போல் தான் 'பதினெட்டாவது அட்சக்  கோட்டில்' இந்து முஸ்லீம் கலவரம் பற்றியும் மானஸரோவரில் திரைப் படக் கதாநாயகன் பற்றியும் எழுதுவதாகத் தோன்றும் மேலோட்டமாகப் பார்த்தால். சற்று நுட்பமாகப் பார்த்தால் மட்டுமே வேறு சில பரிமாணங்கள் தெரியும். இது போன்ற நுட்பமாக எழுதியதால் தானோ என்னவோ இவர் ஒரு பொருள் விளங்கா உருண்டையாக விளங்கினார். கடிக்க முடியாமலும் விழுங்க  முடியாமலும் திணறினார்கள் இவரின் வாசகர்கள். இதைப் பற்றி இவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பாணியை வெகு ஜன அபிப்பிராயத்துக்காக மாற்றிக் கொள்ளவில்லை.
குற்றமில்லாத தொனியில் லேசான அங்கதத்துடன் ஒன்றிரண்டு சமயங்களில் வாழ்க்கையின் முரண்பாடுகளை சுட்டிக் காட்டுகிறார். 'ஒற்றனி'ல் வரும் இரு எழுத்தாளர்களில் ஒருவர் எழுதவேண்டிய புதினத்துக்குக் கச்சிதமான வரைவு ஒன்றைத் தயாரித்து வைத்திருக்கிறார். இன்னொருவர் எந்த விதமான வரை முறை இல்லா வாழ்க்கை வாழுகிறவர். கிட்டத்தட்ட பைத்தியம் போலிருப்பவர். கடைசியில் அவர் எழுதிய நாவல்தான் வெளி வருகிறது. இன்னொரு சிறு கதையில் அப்பாவின் நண்பர் முஸ்லீம் . மதக் கலவரத்தில் மனது முரண் பட்டு அப்பாவைச் சந்திக்க முனைப்பு காட்டாமல் இருக்க அம்மா அந்த சோதனையான நாட்களிலும் அவர் வராமல் இருப்பதைப் பற்றி கறுவிக் கொண்டிருக்கிறாள் . கடைசியில் அப்பா மறைவுக்கு துக்கம் கேட்க வரும் நண்பரை அன்னை கடிந்து கொள்ளப் போகிறாள் என்று மகன் எதிர் பார்த்திருக்க அன்னை நண்பரைப் பார்த்தவுடன் 'நம்மளை இப்படி அநியாயமா விட்டுட்டு போய்ட்டார் பார்த்தேளா?' என்று அழுவதுடன் முடிகிறது கதை.
மானஸரோவரின் கதை அவர் வாழ்க்கை சம்பவங்களால் கோக்கப் பட்டது. இதை சில பேட்டிகளில் அவரே பெரிதாக இல்லாவிட்டாலும் ஒப்புக் கொண்டிருக்கிறார். குடும்ப வாழ்க்கையைத் துறந்து சில காலம் சாமியார்களுடன் அவர் சுற்றித் திரிந்திருக்கிறார். அதைப் பற்றி வெளிப்படையாக கூற அவர் தயங்கினார். அவரின் படைப்புகளில் தென்படுகின்ற சார்பிலா நோக்குக்கு இது ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். ஜே கிருஷ்ணமூர்த்தி சொற்பொழிவின் தொடக்கத்தில் எப்போதும் ஒரு இயற்கைக் காட்சியை வர்ணிப்பார். பின்னர் அவர் பேசும் கருப் பொருளுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும். சங்க இலக்கியங்களிலும் இது போன்ற விஷயத்தை நாம் கவனிக்க முடியும். எனக்குத் தோன்றுவதெல்லாம் இரண்டையும் தொக்கி நிற்கும் பருண்மை சொல்லாத வார்த்தைகளில்தான் அடங்கியிருக்கிறது என்று தோன்றும். அசோகமித்திரனின் எழுத்தும் இப்படிப் பட்டது தான்.
அசோகமித்திரன் திருப்தியாகத்தான் வாழ்ந்து மறைந்தாரா? எனக்கு சந்தேகமாகத் தான் இருக்கிறது. அவர் எழுத்தில் வெளியான துறவு அவர் மன நிலையில் இருந்ததா சந்தேகமே.
சரியான கவனிப்பும் அங்கீகாரமும் கிடைக்காத வருத்தத்துடன் தான் இருந்தார் அவர். பிராமணனாகப் பிறந்ததால் தான் தன்னை தமிழ் கூறும் நல்லுலகு புறக்கணித்தது என்று அவர் வருந்தினார். 'ஜெயகாந்தன் ஆட்சியில் இருந்த எல்லோரையும் சகட்டு மேனிக்குத் திட்டினார்; அவருக்கு போட்டி போட்டுக்கொண்டு விருதுகளும் அங்கீகாரமும் வழங்கினார்கள். என்னை யாரும் கண்டு கொள்ள வில்லை; ஜாதி தான் காரணம்' என்று வருந்தினார். இது ஓரளவுக்கு உண்மை தான். நஷ்டம் நிச்சயமாக அசோகமித்திரனுக்கல்ல.
சிறிய சூழலில் இயங்கிய தமிழின் மிகப் பெரிய கை ஒன்று மறைந்தது. அவர் ஆத்மா சாந்தி அடைவதாக!

வியாழன், 9 பிப்ரவரி, 2017

தற்போதைய அரசியல் நிகழ்வுகளும் நாமும்

உலகின் பண்டைய இலக்கியங்களுக்கும் மகாபாரதத்துக்கும் அணுகுமுறையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. மற்ற இலக்கியங்கள் மனிதனைக் ‘கெட்டவன்’ என்றும் ‘நல்லவன்’ என்றும் வேறுபடுத்திப் பாகுபாடு செய்துதான் இலக்கிய ஆக்கங்களைச் செய்துள்ளன. மகாபாரதம் மட்டும்தான் மனிதர்கள் எவ்வாறு வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. தர்மர் செய்த தீங்குகளையும், துரியோதனன் செய்த நல்ல செயல்களையும் வியாசர் சுட்டத் தவறவில்லை. உப பாண்டவர்களைக் கொல்வதற்கு முன் நடக்கும் சம்வாதத்தில் காகங்களைத் தாக்கும் கூகைகளை அஸ்வத்தாமன் சூசகமாக ஏற்றுக் கொள்கிறான். அவனைப் பற்றிக் குறிப்பிடும் போதும் வியாசர் மகாத்மா என்றே குறிப்பிடுகிறார். 
நம் அணுகுமுறையில் உள்ள கோளாறு என்னவென்றால் எல்லா மனிதர்களையும் நல்லவன் கெட்டவன் என்று பாகுபடுத்தப் பார்ப்பதே. இப்படிப் புரிந்து கொண்டு உறவுகளைக் கட்டமைப்பது நமக்கு மிகவும் எளிதாக இருக்கிறது. தவிரவும் நமக்கு எப்போதும் ஒரு பொது எதிரி வேண்டியிருக்கிறது. அதற்கான இலக்குப் புள்ளிகளை சிலர் விதி வசத்தாலோ வேறு செய்கைகளாலே நம்மிடம் காண்பிக்கும்போது நமக்கு வேலை இன்னும் எளிதாகிவிடுகிறது. 
வியாசரைப் பொறுத்தவரை நல்லவன் கெட்டவன் என்கிற பாகுபாட்டைச் சற்று உயர்த்தி ஸ்வதர்மம் என்கிற ஒரு மனப்பாங்கைச் சுட்டுகிறார். இதன் பிரகாரம் உலகத்தில் பொது தர்மம் என்று ஒன்றில்லை என்றும் அவரவர் பிறப்பு வளர்ப்பு சூழ்நிலை மனப்பாங்கு என்பதனைக் கொண்டு அவரவர் பொருத்தமான ஸ்வதர்மத்தைப் பூண வேண்டும் என்று நிறுவுகிறார்.
இதன் பிரகாரமே கர்ணனையும் சகுனியையும், திருதராஷ்ட்ரனையும், விகர்ணனையும், தர்மனையும், பீமனையும் அவர் சித்திரிக்கிறார். மகாபாரதத்தின் காலத்தை வென்று நிற்கும் தன்மை எக்காலத்துக்கும் பொருத்தக்கூடிய பாங்கு இதனாலேயே என்று தோன்றுகிறது.
இனி விஷயத்துக்கு வருகிறேன். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமையின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு வந்ததிலிருந்து அவருக்கு எல்லா இடங்களிலிருந்தும் (நான் உட்பட) பாராட்டு மழை. சசிகலா பொது எதிரி ஆகிவிட்டார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது “காணோம்... காணோம்... ஓபிஎஸ்ஸைக் காணோம்...” என்று அவரை  வில்லனாகச் சித்தரித்த கூட்டம் இன்று ஹீரோவாகக் கொண்டாடுகிறது.
இது விஷயமாக எனக்குமே அவருடைய எளிமையாலும் காரியங்களைச் சாத்வீகமாக ஆற்றும் சாதுரியத்தாலும் கடுமையாக விமர்சிப்பவர்களைப்  பார்த்து பெருந்தன்மையாகச் சிரித்துவிட்டுப்  போவதாலும் பெரிய வசீகரப் புள்ளியாகத் தெரிகிறார். 
‘காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் 
மீக்கூறும் மன்னன் நிலம்‘ (குறள்: 386) என்கிற குறளுக்குப் பொருத்தமாகத் தெரிகிறார் ஓபிஎஸ். 
ஆனால் சில சந்தேகங்களைத் தவிர்க்க முடியவில்லை.
1. சசிகலாவின் ஆகாத்தியங்களை ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொறுத்து வந்திருக்கிறார். அவரை விழுந்து கும்பிட்டிருக்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு முன் மொழிந்திருக்கிறார் - இப்போது சசிகலா முதல்வர் பதவியை மடை மாற்றம் செய்தவுடன்தான் அவரின் குணாதிசயக் கேடுகள் இவர் கண்ணில் தெரிகின்றனவா?
2. தேர்தலுக்கு முன்னர் பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் நிறைய ஊழல் செய்து விட்டதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பி அதைச் சிலர் ஜெயலலிதா அம்மையாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகச் சொல்லப்பட்டதே அது உண்மையா?
3. அதேபோல் தன் ஆட்களையே பொறுப்பான பதவிகளுக்கு சிபாரிசு செய்ததன் மூலம் தன் முக்கியத்ததுவம் அரசியல் கட்சியிலும் குறையாமல் பார்த்துக் கொள்ள முயல்கிறார் என்றொரு குற்றச்சாட்டு எழுந்து அதுவும் அம்மையாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது என்கிறார்களே அது உண்மையா?
இதெல்லாம் உண்மையாயிருக்கும் பட்சத்தில் பன்னீரை நாம் துன்பம் இழைக்கப்பட்ட அப்பாவி என்று கருத முடியாது. மாறாக மிகவும் சாணக்கியமாகச் செயல்பட்டிருக்கிறார் என்றுதான் கருதவேண்டும் - தவிரவும் இவர் பொது அலை எங்கு அடிக்கிறதோ அந்த திசையை நோக்கிச் செல்பவர் போல் தெரிகிறது. அது ஒரு தலைவனுக்குரிய குணாதிசயம் கிடையாது. தலைவன் வழி நடத்த வேண்டும்.
சசிகலாவின் விஷயத்தில் எல்லோருமே ஒரு பொது எதிரியைக் கண்டாயிற்று. போட்டு சாத்து சாத்தென்று சாத்துகிறார்கள் - அவரின் கடந்தகால சரித்திரம் அப்படிப் பட்டதென்பதால் வரும் விமர்சனங்களில் பெருமளவு குறை காண வாய்ப்பில்லைதான்.
ஆனால்... 
ஜெயலலிதா அம்மையாரும் இவரும் சேர்ந்து செய்த தவறுகளுக்கெல்லாம் இவரை மட்டும் பொறுப்பாக்கிவிட்டு அம்மையாருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்ன நியாயம்? அம்மையார் இறந்துவிட்டார் என்கிற ஒரே காரணம் தானிருக்க முடியும். ஜெயலலிதா சசிகலாவை வீட்டை விட்டு விரட்டியதை மட்டும் எல்லோரும் சுட்டிக் காட்டுகிறார்களே ஒழிய, அம்மையார் அவரை ஏன் மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொண்டார் என்று யாருமே விவாதிக்கத் தயாராக இல்லை. 
அம்மையார் மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா அதை ராணுவ ரகசியம் போல் காப்பற்றியது மன்னிக்க முடியாத குற்றம்தான் - இன்னும் சிலபேரைப் பார்க்க அனுமதித்திருக்கலாம் - சில புகைப்படங்களைப் பத்திரிக்கைகளுக்குக் கொடுத்திருக்கலாம். மருத்துவர்கள் பெரிய நம்பிக்கையெல்லாம் கொடுக்காமல் உள்ளது உள்ளபடித் தெரிவித்திருக்கலாம் - தேறி வருகிறார் என்று தினமும் செய்தி கொடுத்துவிட்டு திடீரென்று ஒருநாள் இறந்துவிட்டார் என்று அறிவித்தால் எல்லோருக்குமே சந்தேகம் வரத்தான் செய்யும்.
எம்ஜிஆர் உடல் நலக்குறைவான போதும் இதுதான் நடந்தது. ஆர்.எம்.வீரப்பன், ஜானகி அம்மையார் மருத்துவர்கள் போக மீதம் யாருக்குமே விபரம் தெரியவில்லை. ப்ரூக்ளின் மருத்துவமனை சென்ற பின்னரே புகைப்படங்களும் வீடியோவும் வெளியிடப்பட்டன. ஆனால் நல்லவேளையாக எம்.ஜி.ஆர் பிழைத்துக் கொண்டார்.
அடுத்ததாக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதில்தான், யார் ஆட்சி அமைப்பார்கள் என்கிற விஷயம் தொக்கி நிற்கிறது. ஓபிஎஸ் ஒரு 20 எம்எல்ஏக்களைத் தன் பக்கம் இழுக்க முடிந்தால் போதும். சசிகலா ஆட்சி அமைக்காது பார்த்துக் கொள்ளலாம் - ஆனால் அவர் ஆட்சி அமைக்க இந்த ஆதரவு மட்டும் போதுமா? திமுக வெளியிலிருந்தோ உள்ளிருந்தோ ஆதரவு அளிக்கும் வாய்ப்பு கம்மி - ஏனென்றால் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தால் அதனால் ஆதாயம் அடையக்கூடியது திமுக மட்டுமே. அதிமுக சசிகலா அணி - ஓபிஎஸ் அணி என்று பிரிந்தால் அது திமுக தேர்தலில் அமோக வெற்றியடையத் துணை புரியும் என்கிற உண்மை எல்லோருக்குமே தெரியும்.
ஒருவேளை சட்டமன்ற உறுப்பினர்கள் பெருவாரியாக ஆதரவு அளித்து சசிகலா ஆட்சி அமைக்க சந்தர்ப்பம் அமையுமானால் அதை அனுமதிப்பதுதான் சட்டத்தின் வழி - ஆளுனரும் அதையே பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அதற்கு முன்னாலேயே நாம் கட்சி கட்டிக் கொண்டு வாதாடுவதில் பயனில்லை. ஜல்லிக்கட்டுக்குப் போராடியது போல் இதற்குப் போராட முடியாது; கூடாது. 
இப்போதைய சூழ்நிலையில் பன்னீர் தமிழக முதல்வராக நீடித்தால் கவர்ச்சி இல்லாது எளிமையான கலந்து பழகுகிற முதல்வர் நமக்குக் கிடைப்பார் - பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் அப்படி ஒரு தலைவரை ஓபிஎஸ்ஸிடம்தான் காண்கிறோம். ஆனால் பன்னீர், பெருந்தலைவர் அந்தஸ்துக்கு உயர்வதற்கு தன்னலமின்மை, தொலைநோக்கு, முடிவெடுக்கும் திறன், மனிதர்களை எடைபோடும் தன்மை, முடிவுகளில் உறுதி, தேச நலன் என்கிற ஒற்றைக் குறிக்கோள் இவற்றை வளர்த்துக் கொண்டால் மட்டுமே சாத்தியம்.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

'நீட்டு'ம் தமிழ்நாட்டின் கல்விநிலையும்

நான் புகுமுக வகுப்பில் இருந்த போது ஐஐடி கேள்வித்தாளை பார்த்திருக்கிறேன். ஒரு இழவும் புரியாது. கேள்விகளெல்லாம் ஒரே கணக்குக் குறியீடுகளுடன் கிழக்கில் இருந்து மேற்கில் ஓடும். நான் பள்ளி இறுதி வரைத் தமிழ் மீடியத்தில் படித்தவன். என்றாலும் சடாரென்று புகு முக வகுப்பில் ஆங்கில வழிக்கு கல்விக்குத் தாவுவதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. என் குடும்பப் பின்னணி அப்படிப் பட்டது. அப்பா ஆங்கிலப் பேராசிரியர் என்பதால் என் ரத்தத்தில் ஆங்கிலம் ஓடுகிறது என்பார்கள். நான் பேசுகிற ஆங்கிலத்தைப் பார்த்துக்  கிறங்கிப் போய் என்னுடன் நட்புக் கொண்டவர்கள் பலர்.புகுமுக வகுப்பில் கணக்கில் 100/100 வாங்கினேன். இதையெல்லாம் வைத்துக்கொண்டு ஐஐடியில் ஜல்லி அடிக்க முடியாது போனதே உண்மை. அதே சமயம் என்னை மாதிரியே தமிழ் மீடியத்தில் பயின்று புகுமுக வகுப்பில் ஆங்கில மீடியத்தில் படித்து நிறைய மார்க்குகள் வாங்கிய நண்பன் ஸ்ரீநாத் ஐஐடி நுழைவுத் தேர்வை ஊதித் தள்ளினான்.மிகவும் சாதாரணமான குடும்பம். ட்யூஷன் எல்லாம் கிடையாது. தானாகப் படித்து வந்தவன்.
கல்லூரி விடுதியில்  அன்புச் செழியன் என்று ஒரு நண்பர். வேட்டி கட்டிக் கொண்டு இருப்பார். பார்த்தால் மாணவன் என்று சொல்ல முடியாது. கறுப்பாகக்  கிராமத்து ஆள் மாதிரி இருப்பார். ஏதோ குக் கிராமத்தில் படித்து வந்தவர். படிப்புக்கு உதவி தொகையை எதிர் பார்க்கிற நிலைமை. அவரைப் பார்த்தால் பேராசிரியர்கள் பயப்படுவார்கள் என்பார்கள். சக மாணவர்கள் 'செழியன் செழியன்' என்று கொண்டாடுவார்கள். இயற்பியலில் என்ன சந்தேகம் கேட்டாலும் சொல்லுவார். புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்கிற அவசியமே இருக்காது. அவர் பட்டம் முடித்த கையுடன் எம் ஐ டி சென்றார்.
இதனாலெல்லாம் எனக்குத் தோன்றுவதெல்லாம் நன்றாகப் படிக்கிற மாணவன் நீட் என்ன எந்த நுழைவுத் தேர்வையும் ஊதித் தள்ளுவான் என்றுதான் தோன்றுகிறது.
ஆனால்........
நான் பார்த்த வரை தமிழ் நாட்டின் கல்வி மாணவனின் சிந்தனையைத் தூண்டுகிற விதத்தில் வடிவமைக்கப் படவில்லை. இங்கிருக்கும் நுழைவுத் தேர்வுகளையும் அதையொட்டியே அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட வேலை பார்க்கும் நண்பர் பையனுக்கு எம்பிபிஎஸ் சீட்டு கிடைத்தது. அந்தப் பையனை நண்பர் முன் கூட்டியே நாமக்கல்லில் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டார். அவர்கள் என்ன மாயம் செய்கிறார்கள் என்று கேட்டேன்.அவர்கள் கொடுக்கும் நோட்ஸை வரி வார்த்தை அரைப் புள்ளி மாற்றாமல் அப்படியே உருப்போட வேண்டும் அவ்வளவு தான். ராத்திரி பன்னிரண்டு மணியானாலும் விடமாட்டார்கள். நாள் கிடையாது கிழமை கிடையாது, விடுமுறை.....மூச்...
சிபிஎஸ்சி மாணவர்களையும் பார்த்திருக்கிறேன். என் குழந்தைகள் சிபிஎஸ்சியில் தான் படித்தார்கள். நுழைவுத் தேர்வை மிகச் சுலபமாக எதிர் கொண்டாள் என் மகள். பெரிய கோச்சிங் வகுப்பெல்லாம் போகவில்லை . ஐஏஎஸ் தேர்வு எழுதுகிறவர்கள் என்சிஆர்டி புத்தகங்களை படிப்பதைப் பார்த்திருக்கிறேன். எளிமையான நடையில் மிக விளக்கமாகப்  பாடங்கள் இருக்கும். நான் பார்த்த வரை மாணவர்களின் சிந்தனையை தூண்டுகிற விதத்தில் மாயம் செய்கிறது சிபிஎஸ்சி பாடத்  திட்டம். 
பல மாநிலங்கள் சிபிஎஸ்சி பாடத்  திட்டத்தை அடி  ஒற்றியே அமைத்துக் கொண்டிருக்கும் போது நமக்கு என்ன தயக்கம்?
பெரிய தடை படிப்பில் பெரிய மாற்றங்கள் விழையாத, புதிதாகக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் இல்லாத ஆசிரியர்கள் தான்.
என்ன செய்ய வேண்டும்?
1. நீட் தேர்வுக்குத் தடை ஏதும் சொல்லாது அனுமதிக்க வேண்டும்.
2. அதற்காகத் தேவைப் படும் கோச்சிங்கை அரசே ஏற்றுத்  திறம்பட நடத்த வேண்டும்.
3. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை ஒற்றி தமிழ் நாடு பாடத்திட்டத்தை மாற்றவேண்டும். இந்த வருடம் ஒன்றாவதிலிருந்து மாற்றத்தை ஆரம்பித்தால் 12 வருடங்களில் திட்டம் முழுமை அடைந்து விடும்.
4. அதற்குத்  தேவையான பயிற்சிகளை  ஆசிரியர்க்கு உடனே துவங்க வேண்டும்.
5. இதைத் தமிழ் வழிக் கல்வியிலேயே செய்யலாம். 

எனக்குத் தெரிந்த  வரை இது தான் கிணற்றுத் தவளைகளாய் இருக்கும் நம் மாணவர்களுக்கு வெளிக் காற்றை சுவாசிக்க கொடுக்கக் கூடிய வாய்ப்பு என்று தோன்றுகிறது.
டாக்டர் படிப்பு எனும் மாய மான் வேட்டையைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. பின்னர் எழுதுவேன்.

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...