சனி, 2 ஜூன், 2012

ஆங்கிலக் கல்வி மோகம் தலைவிரித்தாடுகிறதே....

 தமிழ் ஆசான் 

தி.வே. கோபாலய்யருடன் 

ஒரு நேர்காணல்

ஆசிரியர் அழகப்பன் பெயரால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது பெற்ற திரு.தி.வே.கோபாலய்யர். கடந்த நாற்பத்தேழு வருடங்களாகத் தமிழ் தொண்டாற்றி வரும் ஆசான். எண்பது வயதிலும் தளராது உழைத்து வரும் இவ்விளைஞர் 23 நூல்களைப் படைத்தவர். ஆறு புத்தகங்கள் அச்சேறக் காத்திருக்கின்றன. தமிழ் இலக்கண மரபுச் சொல் அகரவரிசை அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. கூர்மையான நினைவாற்றல், தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய திடமான கருத்துக்கள், வயதைப்பொருட்படுத்தாது உழைத்துக் கொண்டிருக்கிற முனைப்பு, தம் சாதனைகளைப் பற்றிய பெருமித உணர்வு இல்லாத அடக்கம் இவைதான் தி.வே.கோபாலய்யர்.
    15 ஆண்டுகள் தஞ்சையில் தமிழ் ஆசிரியராகவும், 15 ஆண்டுகள் திருவையாறு தமிழ்க் கல்லூரிப் பேராசியர் ஆகவும் பணியாற்றிய இவர் 1979ம் ஆண்டிலிருந்து புதுச்சேரி வாசி. பிரஞ்சுக் கலை நிறுவனத்துக்காகத் தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார்.
    மருந்துக்குக் கூடத் தற்கால அலங்காரம் பிரதிபலிக்காத எளிமையான இவருடைய மத்தியதர இல்லத்தில் சந்தித்தேன். கேட்ட கேள்விகளுக்கு, கடல் மடை திறந்த வெள்ளம் போன்று உற்சாகமாக அவர் பதில் சொல்லிக் கொண்டு போனவிதத்தில் பேட்டி ஒரு ஸ்வாரஸ்யமிக்க உரையாடலாகப் பரிணமித்தது. இரண்டு மணி நேரம் கழித்து அவரிடம் விடைபெற்ற போது அவரைத் தலைவணங்க எழுந்த உணர்ச்சியை அடக்க முடியவில்லை. இனி பேட்டியிலிருந்து சில பகுதிகள்;

நீங்கள் தமிழைத் தேர்ந்தெடுத்து வந்த காரணம் என்ன?

    நான் பிறந்த ஊர் திருவையாறு. 1940ம் வருடம் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த கையுடன் என் தந்தை என்னைப் பரமாச்சாரியாரிடம் கூட்டிச் சென்றார். மேற் படிப்புக்குத் திருச்சிக்கு என்னை அனுப்ப அவருக்கு எண்ணம். பரமாச்சாரியார் தமிழில் எல்லாமே இருக்கிறது. இருந்தும் தமிழ்ப் படிப்பு குறைந்து வருகிறது.  பையனைத் தமிழில் சேர்த்துவிடு என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். அவர் சொன்ன பின் அப்பீல் ஏது? திருவையாறு கல்லூரியில் சேர்ந்தேன். பள் ளியிலும், சரி, கல்லூரியிலும் சரி முதல் மாணவனாகவே இருந்தேன்.

வேலைக்குச் சென்றது பற்றி?

 வித்வான் படிப்பை முடித்துச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே தஞ்சையில் ஒரு பள்ளியில் வேலைக்குச் சென்று விட்டேன். வெள்ளைக்காரர்தான் அங்கே தாளாளர். அவர்தான் என்னைப் பணிக்குத் தேர்ந்தெடுத்தார் அங்கு ஒரு வருடம். பின் திருப்பனந்தாள் கல்லூரியில் 5 வருடங்கள். அதன்பின் திருவை யாறு கல்லுரியில் 1979 வரையிலும் பணி அதன்பின்னர் தற்போதைய பிரெஞ்சு அரசால் நிதி உவி பெறும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த இருபத்தைந்து வரு டங்களாகப் பணியாற்றி வருகிறேன்.

தொல்காப்பியம் பின் நன்னூல் இவற்றிற்குப் பிறகு தற்கால மாற்றங்களுக்கேற்றவாறு இலக்கணம் வளந்திருக்கிறதா?

 வடமொழியைப் பொறுத்தவரை பாணினி எழுதிய அஷ்ட அத்யாயிக்குப் பலர் விளக்கவுரை போன்று எழுதியிருக்கிறார்கள். முதலில் பதஞ்சலி எழுதினார். பின் வரருசி என்று காத்யாயனார் எழுதினார். இதன்பின்னர் காசியிலிருந்து இரண்டு பேர் காசிகா விருத்தி என்று எழுதினர். இவை எல்லாமே மூலத்தின் 4000 சூத்திரங்களை வேறுவிதத்தில் சீர் செய்தவைதாம். ஆனால் இவையே அபசித்தாந்தம் என்று அழைக்கப்பட்டன. சுருங்கச் சொன்னால் பாணினி யின் படைப்பை பாதிக்காத ஒரு வழிமொழி நூல்கூட அஷ்ட அத்யாயியின் அந்தஸ் தைப் பெற வில்லை. வடமொழியின் இலக்கணம் அந்த அளவிற்குக்கூட வளைந்து கொடுக்க இடம் கொடுக்கவில்லை. தமிழில் நிலைமை வேறு. தொல்காப்பியம் வேறு. நன்னூல் வேறு. இது போன்ற மாற்றங்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் விதத்தில் அமைந்திருப்பது தமிழின் சிறப்பு. ஆனால் தொல்காப்பியத்திற்குப் பிறகே பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. உதாரணமாக `ச’வை முதற் சொல்லாகக் கொண்ட வார்த்தைகள் தொல் காப்பியர் காலத்தில் கிடையாது. இப்போது வழக்கில் ஏராளமான சொற்கள் வந்து விட்டன. இதைக் கருத்தில் கொண்டுதான் ‘கடிசொல் அல்ல காலத்துப் படினே’ என்று தொல்காப்பியமும், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்’ என்று நன்னூலும் கூறுகின்றன. இப்படிப் பார்க்கும் போது தொல் காப்பியமும் நன்னூலும் தற்போதைய இலக்கணத் தேவைகளுக்குப் போதாது என்று தோன்றினாலும் இதற்கான சலுகைகளின் தேவையை அவை அக் காலத்திலேயே குறிப்பிட்டிருப்பது சிறப்பு.
    தொல்காப்பியத்திற்கு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட உரை இல்லை. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டில் தான் அபிநயம் என்கிற நூல் ஏற்பட்டிருக்கிறது என்பதை நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதன் சொல்கிறார். இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இலக்கணத்தைப் பொறுத்தவரை தொல்காப்பியத்தின் மையக் கோட்பாடு பழுதுபடாமல் சிற்சில மாறுதல்களுடன் அவ்வப்போது நூல்கள் வரத்தான் வேண்டும்.

       வடஇந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் வேர் மொழியாக சமஸ்கிருதம் விளங்குவதை அந்தந்த மொழி பேசுபவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். தென்னிந்தியாவின் மூல மொழியாகத் தமிழ் இருந்தும் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளின் வேர் மொழியாகத் தமிழுக்கு அங்கீகாரமும் பரஸ்பரத் தொடர்பும் இல்லையே. அது ஏன்?
 
 வடமொழி விஷயம் வேறு. அது யாராலும் பேசப்படாதிருந்தும் படித்தவர்கள் ஒருவரோடொருவர் தகவல் பரிமாற்றத்திற்காக ஏற்படுத்திக்கொண்ட  மொழி. தென்னிந்தியா வைப் பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் மூல பாஷையாக ஒன்று இருந்திருக்கிறது. அம் மொழியை திராவிடம் என்று தான் அழைக்க வேண்டும். அந்த மொழியின் மூலக்கூறுகள் பலவற்றைத் தமிழ் எடுத்துக் கொண்டது. இதர தென்னிந்திய மொழிகளும் கொஞ்சம் எடுத்துக் கொண்டன. மூலமொழியின் சிறப்பியல்புகளைப் பெரும்பாலும் எடுத்துக் கொண்டதால் தான் தமிழ் தென்னிந்திய மொழிகளில் முதன்மை மொழியாக விளங்கி வரு கிறது.
    இந்தக் காரணத்தினால்தான் தனித்து இயங்கும் இயல்பு பெற்றது தமிழ். மற்ற தென்னிந்திய மொழிகள் அனைத்துமே இலக்கணத்தைப் பொறுத்தவரை வட மொழியின் திட்ட வரையறையைப் பின்பற்றுபவை. இதற்கு முதன்மையான காரணம் வல்லின மெல்லின ஒலிகளுக்கு அந்த மொழிகள் சமஸ்கிருதத்தை அடியொற்றுவது. தமிழில் உச்சரிப்பு மொழியில் இயல்பிலேயே அமைந்திருப் பதால் அது தனித்து இயங்கும் வல்லமை படைத்தது.


வடமொழியை இன்று இறந்த மொழி என்கிறார்கள். இதுபோன்ற நிலை தமிழுக்கு ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளதா?
    
வடமொழி நான் ஏற்கனவே கூறியிருந்த படி யாராலும் பேசப்படாத மொழி. சமஸ்கிருதம் என்றாலே திருத்தியமைக்கப்பட்டது என்று பொருள். அந்தக் காலத்தில் அறிஞர்கள் தத்தமது கலாசாரத்தின் பரிமாற்றத்திற்காக ஏற்படுத் திக் கொண்ட மொழி வட மொழி. இதில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டியது வட மொழியைப் பெரிதும் ஆதரித்து வளர்த்தவர்கள் தமிழர்களே. உதாரணமாக உபநிடதங்களுக்கு விளக்கமாக வியாசர் பிரும்ம சூத்திரம் எழுதினார். இதற்கு உரை எழுதிய சங்கரர், மத்வர், ராமானுஜர், ஸ்ரீகண்டர், ஸ்ரீபதி பண்டித ஆராத்யர் ஐவரும் தமிழர்கள். சங்கரரையும், மத்வரையும் நான் தமிழர் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அப்போது மலையாளம் ,கன்னடம் என்கிற பாகுபாடு இல்லை.
    தமிழைப் பொறுத்தவரை அது செம்மொழியாக இருந்தபோதிலும் அது பேசு மொழியாகவும் இருந்து வருகிறது. அவ்வப்போது காலங்களின் தன்மையை ஒட்டி பிர யோகத்தில் மாற்றங்கள் நிகழலாமே ஒழிய தமிழ் மொழி முற்றிலும் அழிந்துவிடுவதற்கான வாய்ப்பு இல்லை.

அப்போது தமிழின் எதிர்காலம்?

 அதை நினைத்தால் கவலையாக இருக்கிறது. நான் சொல்வது முரண் பாடாகத் தோன்றலாம். தமிழ்மொழியின் தனித்தன்மையினால் அது சாகாவரம் பெற்றது. ஆனால் தமிழ் தமிழ் என்று எங்கும் கூக்குரல் கேட்டுக் கொண் டிருக்கும் இப்போது நிதர்சனத்தில் நம் தமிழர்களுக்கு மொழி அபிமானம் கம்மி. தமிழ் கற்பிப்பது என்பது ஃபாஸ்ட் புட் மாதிரி ஆகி விட்டது. தமிழை ஊக்கு விக்கிறோம் என்கிற பெயரில் தமிழ்க் கல்வியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டார்கள். இருக்கும் எம்.ஏ. , பி.எச்.டி. க்களில் பாதிப்பேர் தமிழில் பட்டம் பெற்றவர் கள். ஆனால் அவர்களில் நிறையப் பேரின் தமிழ் மொழிசார்ந்த புலமை கம்மி. இதற்குப் பாடத் திட்டத்தைத்தான் குறை சொல்ல வேண்டும்.
    இது போதாதென்று ஆரம்பப் பள்ளியிலிருந்து தாய்மொழி தவிர்த்த கல்விதான் பரவலாக உள்ளது. ஆங்கிலக்கல்வி மோகம் தலைவிரித்தாடுகி றது. குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றன. ஆங்கிலத்திலும் அரைகுறை ஞானம் தான் ஏற்படுகிறது. நமது தமிழர்களுக்கு பாஷாபிமானம் இருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்குமா? ஆந்திரத்திலோ கர்நாடகத்திலோ கேரளத் திலோ இப்படி ஒரு நிலை இல்லை.
    இதை மாற்ற தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், அரசு, பெற்றோர் என்று பலதரப்பட்டவர்களும் சேர்ந்து முனையவேண்டும். அப்போது தமிழ் பழைய சிறப்பை எய்தும்.

1 கருத்து:

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...