சனி, 2 ஜூன், 2012

இமயம்




    ஐந்தரை அடி உயரமே உள்ளவர். இந்த உயரக் குறைவை அவரைத் திரையில் கண்ட எவரும் உணரவில்லை. மாறாக ஒவ்வொரு படத்திலும் அவர் விஸ்வரூபம் எடுத்ததைத்தான் பார்த்திருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழ னில்  யாருமே சிவாஜியைக் காணவில்லை. சிதம்பரம் பிள்ளையைத் தான் கண்டார்கள். கட்டபொம்மன் என்கிற குறுநில மன்னன் வெள்ளையரை எதிர்த்தவன் - விடுதலைச் சரித்திரத்தின் சின்னமாக உருவானது சிவாஜியால் தான். பாசமலரின் ராஜசேகரன், அன்றைய முதலாளிகளுக்கு ஆதர்சம். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்த ஜெமினி வாசன், கதறிக் கதறி அழுதாராம். அவர் இளமையும், அன்னையும்  அவர் வாழ்க்கையில் முன்னுக்கு வரப்பட்ட சிரமங்களும் நாடகத்தின் ஊடே அவர் எண்ணத் திரையில் நிழலாடிக் கொண்டே இருந்திருக்கின்றன.
    நாடக உலகின் பிதாமகர் டி.கே. ஷண்முகம், ஔவையாராக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்.கிழவியின் தோற்றம் வெண்டுமென்பதற்காக முன்னிரு பற்களைப் பிடுங்கிக் கொண்டவர். ஔவையாராய் கூன் போட்டுக் கூன் போட்டு கூன் அவரிடம் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அவர் ஒரு நாடகம் பார்த்த பொழுது ராமபிரானின் அன்னையாக நடித்த நடிகையின் உணர்ச்சி கரமான நடிப்பில் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறார். நாடகம் முடிந்த பின் 'யார் அந்த நடிகர்?' என்று கேட்டாராம். 'அவரைத் தெரியாதா? அவர் தான் வி.சி. கணேசன்' என்று சொன்னார்களாம். அவர் நம்முடைய நடிகர் திலகம், சிவாஜி கணேசன்.
    ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து வந்தவர், சிறுவயதிலிருந்தே நாடகத்தில் பல்வேறு முகங்களையும் துறைகளையும் அநுபவ வாயிலாகக் கண்டவர். மு. கருணாநிதி என்கிற காட்டாற்று வெள்ளம் வசனம் எழுதிய பராசக்தியின் கதாநாயகனாக அவர் ஆனது, விதி வசத்தால் என்று சொல்வதை விட, தமிழ் நாட்டின் அதிருஷ்டத்தால் என்று தான் சொல்ல வேண்டும். ‘’ தென்றலைத் தீண்டியதில்லை ; தீயைத் தாண்டியிருக்கிறேன். ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள், அம்பாள் எப்போதடா பேசினாள் அறிவு கெட்டவனே? ‘’  போன்ற நெருப்புப் பொறி களைப் பொத்தி  வைத்திருந்து கக்கியவர், சிவாஜி கணேசன். தமிழ்த் திரைப்பட உலகில் அன்றிலிருந்து ஒரு புது சகாப்தம் தொடங்கியது. குரலின் ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சியின் பாவத்தைப் பாதிக்காது இருக்க முடியும் என்று தமிழ் உலகிற்கு முதலில் மெய்ப்பித்தவர் சிவாஜி.
    ஆரம்பத்தில் மிகை தவிர்த்த உணர்ச்சி வெளிப்பாடு, அழுத்தமான வசனங்களின் உணர்வுத் ததும்பல்களை அடக்காமல் பார்த்துக் கொண்டது அவரின் சாமர்த்தியம் என்று தான் சொல்லவேண்டும்.
    அவருடைய நடிப்பின் பரிணாம வளர்ச்சியை மூன்று பிரிவாக நாம் பார்க்கலாம். முதலில் மிகை தவிர்த்த உணர்ச்சியுடன் கூடிய  மிகை வசனங்கள், நடுவில் சற்றே மிகை கூடிய வசனங்கள் குறைந்த உணர்ச்சிகர நடிப்பு, பின்னால் மிகையும், உச்சரிப்பில் ஏற்றத்தாழ்வும் கூடிய உரத்த நடிப்பு. இந்தப் பரிணாம வளர்ச்சியைத் தமிழ் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்த போதிலும் ஒவ்வொரு கட்டத்திலும் அவரின் ஆளுமைத் திறனை உண்மையாக ரசித்துப் பாராட்டினார்கள்.
    இந்த நடிப்பு வளர்ச்சியில் நாம் சிவாஜியின் நடிப்பின் உச்சமாகப் பார்ப்பது நடுவில் வந்த காலகட்டத்தைத்தான். அப்போதுதான் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர், படிப்படியாக வளர்ச்சி பெற்று, தனக்கென்று ஓர் ஆளுமையையும் தனித்தன்மையையும் கொண்டு வலம் வரத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒரு முரட்டுக் குதிரை போல் இருந்த இவரைஒரு வட்டம் போட்டு  அந்த வட்டத்தை மிகாமல் , வெளிவராமல் திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ஒருவர் இருந்தார். அவர் தான் பீம்சிங். இவர் கதை சொல்லும் பாணியே தனி. கதாபாத்திரங்களைப் பழங்காலக் கலைப் பொருட்களாக உலா விடுவது இவரின் பிரத்யேக பாணி. இந்தியக் கலா சாரத்தின் மரபு சார்ந்த  படிமானங்கள் அழுத்தமாய்ப் படிந்திருந்த பீம்சிங், அதையொட்டியே திரைப்படங்கள் எடுத்தார். பாசமலர், பாகப்பிரிவினை, படித் தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும் போன்ற அழுத்தமான திரைக் கதை களில் இயல்பாக ஒன்றிப் பொருந்தினார் சிவாஜி கணேசன்.
    ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரம். எல்லாமே சிவாஜிக்கு வடிவமைக்கப்பட்டது மாதிரி. படிக்காத மேதையில் விசுவாசமான வேலைக்காரன், எஸ்.வி. ரங்காராவின் குணச்சித்திர மிகை தவிர்த்த நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார் சிவாஜி கணேசன். அவரின் உணர்ச்சிப் பூர்வமான நடிப்பில் மிகை இழையைச் சற்றும் வெளிக் காட்டாத சாதுர்யமான திரைக்கதை அமைப்பின் சாமர்த்தியம் பீம்சிங்கிற்கு உரியது. இசை சேகரத்தின் அந்நாள் மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, தத்துவ தரிசனம் கண்ட பாடலாசிரியர் கண்ணதாசன் போன்றவர்கள் இந்தப் படங்களுக்கு மெருகு கூட்டி, திரைப்படங்களைக் காவிய அந்தஸ்துக்கு உயர்த்தினார்கள்.
    பாசமலரில் முரட்டுப் பாசம் காட்டும் அண்ணன் வேடம் சிவாஜிக்கு. அடர்த்தியான புருவங்கள், மெல்லிய மீசை, தங்கச் சங்கிலி கடிகாரம், சூட்டுடன் ராஜநடை நடந்த சிவாஜியின் நடிப்பில் மனத்தைப் பறிகொடுத்தது தமிழ்ச் சமூகம். ராஜா போல் வாழ்ந்த மனிதன், தங்கைக்காகச் சகலத்தையும் தியாகம் செய்துவிட்டுக் கடைசியில் பிச்சைக்காரன் போல் கண்களையும் இழந்து 'கை வீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கை வீசு' என்று அழும் போது பார்த்த மக்கள் அவ்வளவு பேரும் சேர்ந்து அழுதார்கள்.
    தூக்குத்தூக்கியிலிருந்தும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியிலிருந்தும் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர் தனித்த ஆளுமையுடன் பரிணமித்தது பரிமளித்தது இப்படித்தான். கம்பீரமானவன், முரட்டுத் தனமாக அன்பு செலுத்துபவன், பாசத்துக்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத ஆதர்ச மனிதன், தமிழ் மண்ணில் வலம் வந்தது இப்படித்தான். அவனுக்குத் தெரிந்த தெல்லாம் அன்பு செலுத்துவதும் அன்புக்காக ஏங்குவதும். இப்படி ஒரு காலம் கடந்த பரிசோதனைத் திரைப்பட ஃபார்முலாவை முதன் முதலில் வெற்றிகரமாகப் பரிசோதித்தவர் சிவாஜிகணேசன்.
    படித்தால் மட்டும் போதுமா, எதையும் வெளிப்படையாகச் செய்யும் ஓர் ஆளுமை நிறைந்த மனிதனுக்கும் எல்லாவற்றையும் ரகசியாகப் பூட்டி வைக்கும் மனிதனுக்கும் இடையில் நிகழும் போராட்டத்தைச் சித்திரிக்கும் படம் இது.
    பீம்சிங்கின் பட வரிசையை அடுத்து வந்த படங்கள் எல்லாமே சிவாஜியின் ஆளுமை சார்ந்த மிகை நடிப்பை வெளிக் கொணருவதிலேயே குறியாய் இருந்தன.
    உடல் பருமன் சற்றிளைத்த சிவாஜி, முரட்டு நல்லவன் இமேஜிலிருந்து நல்லவன் இமேஜிற்கு வளர்ந்திருந்த சமயம். பந்துலுவின் கர்ணனையும்  பி.எஸ். வீரப்பாவின் ஆலய மணியையும் கூட இதில் சேர்க்க முடியாது. கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் கை கொடுத்த தெய்வத்தை ஓரளவு சேர்க் கலாம். பின்னர் வந்த ஸ்ரீதரின் படங்கள், எங்க மாமா, தங்கைக்காக போன்ற படங்கள் எல்லாமே  சிவாஜியின் நடிப்பை நம்பியல்லாது இமேஜை நம்பி உருவாக்கப்பட்ட படங்கள். இவற்றில் அன்றிருந்த சந்தை எதிர்ப் பார்ப்பிற்கு  ஏற்ப நடித்திருந்தார் சிவாஜி என்று சொல்லலாமே ஒழிய அந் தந்தக் கதாபாத் திரங்களில் அவர் முழு மனதோடு ஈடுபாட்டோடு நடித்திருந் தாரா என்பது கேள்விக்குறியே. தெய்வமகன். ஆஸ்காருக்குச் சென்றது. ஒரே நடிகர் மூன்று வெவ்வேறு பாத்திரங்களில்
    இதுதான் சிவாஜியின் தோல்வியின் ஆரம்பம் என்று சொல்லலாம். குணச்சித்திரம் மாறி ஆளுமையும் நடிப்பும் என்று ஆகிக் கடைசியில் ஆளுமை மட்டுமே கோலோச்சியது தான் சிவாஜியின் நடிப்பை விரும்பி பார்த்தவர்களை அபிமானத்தால் சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. இதற்கு ஏற்கெனவே கூறியிருந்தபடி சிவாஜியைச் சுற்றிப் பின்னப்பட்ட மாய இமேஜ் வலைதான் காரணம் என்று நாம் பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது.
    இந்த மிகை ஆளுமையின் நடுவிலும் அவ்வப்போது சில நட்சத்திரச் சிதறல்களை அள்ளி வீசாமல் இல்லை. ராமன் எத்தனை ராமனடியில் வீரசிவாஜியாக வசனம் பேசி விட்டுக் கடைசியில் வாளைக் கையில் ஏந்தி ஒரு நடை நடப்பார். சாம்ராஜ்யக் கனவைக் கண்களில் ஏந்திக் கனவில் மிதப்பது போன்ற நடை. உண்மையில் வீர சிவாஜி அதுபோல்தான் நடந்திருப் பார். வியட்நாம் வீட்டின் பிரஸ்டிஜ் பத்மநாபன் வேடத்திற்காக சிம்ஸன் நாராயணசாமி ஐயரைப் போய் சிவாஜி உன்னிப்பாகக் கவனித்தார் என்று சொல்கிறார்கள். அவர் காட்டிய முகபாவங்களும் நடையுடை பாவனைகளும் பேசிய வசனங்களும் ஓர் உண்மையான பிராமண கணவானைக் கண்களில் கொண்டு நிறுத்தியது. கௌரவத்தின் அநாசார வக்கீல் சத்தத்தையும் மீறி அவரின் கம்பீர நடிப்பு, நம் உள்ளத்தில் நிற்கிறது. திருநாவுக்கரசராகத் திருவருட்செல்வரில் நாம் கண்டது ஒரு முதிய தவயோகியின் அருள் கனிந்த முகத்தை. தங்கப் பதக்கத்தில் நேர்மையும் கம்பீரமும் கண்டிப்பும் மிக்க போலீஸ் அதிகாரியைக் கண்டோம். அதில் பதக்கம் வாங்கக் கடைசியில் அவர் நடக்கும் நடை,  உண்மையான போலீஸ் அதிகாரி யைக் கூடப் பெருமை கொள்ளச் செய்யும்.
    சிவாஜி மறைந்துவிட்டார். குழந்தை போன்றவர். உண்மையான தேசியவாதி.
    படிப்பு அதிகமில்லாத, உருவ லட்சணங்களும் சுமாராக உள்ள ஒரு மனிதர். தம் நடிப்புத் திறமையை மட்டும் வைத்து நம்மையெல்லாம் நாற்பது ஆண்டு களுக்குக் கட்டிப் போட்டிருந்தார்.
    நாடகக் கலை மிகுதியும் வளராத தமிழ்ச் சூழலில், சினிமா,  நாடகத்தைக் கபளீகரம் செய்திருந்த நிலையில், ஓர் உண்மையான நாடகக் கலைஞன், ஒப் பாரும்  மிக்காரும் இல்லாமல் கோலோச்சியது ஆச்சர்யம் தான்.
    அவரை அபிமானிகள் இமயம் என்கிறார்கள். என்ன தவறு?

1 கருத்து:

  1. நல்ல ஆரம்பம்...இவரை கௌரவப்படுத்தாமல் தேசிய விருதுகள் சிறுமைப்பட்டன

    பதிலளிநீக்கு

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...