சனி, 2 ஜூன், 2012

டாகடர் கே. ஏ, குணசேகரன் பேட்டி

கவனிப்பைப் பெறுகிறது தலித் இலக்கியம்.....


- டாகடர் கே. ஏ, குணசேகரன் பேட்டி


  புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை தலைவராய்ப் பணியாற்றி வரும் டாக்டர். கே.ஏ. குணசேகரன் நாட்டுப் புறப் பாடல்கள், நடிப்பு, நாடகம், நாவல் என்று பன் முகங்களில் தம் ஆளுமையை வெளிப்படுத்தி வருபவர். தன்னானே என்கிற முதல் தமிழ் நபுற ஒலி நாடாவை வெளியிட்டுப் பரவலான கவனிப்பைப் பெற்றவர். சிவகங்கையில் படித்த போது கவிஞர் மீராவால் அடையாளம் காணப்பட்டவர். ஆரம்ப காலத்தில் முற்போக்கு இயக்கங்களால் பெரிதும் பேணப்பட்ட இவர் இன்றும் பல்வேறு இயக்கங்களுடனும் சித்தாந்தங்களுடனும் தொடர்பு கொண்டு தீவிரமாக இயங்கி வருகிறார்.
    கடுமையான உழைப்பாளி. படிப்பாளி .தலித்தாகப் பிறந்ததால் தாம் பெற்ற அடிகளையும் வலியையும் வடு என்கிற நாவலில் வெளிப்படுத்தி இருக்கிறார். மிகுந்த முனைப்புடன் இயங்கும் இவரை இவர் இல்லத்தில் சந்தித்து உரையாடிய உரையாடல் மிகவும் மனந்திறந்தும் பரிவுடனும் அமைந்து நிறைவு தந்தது .தாம் பெற்ற வலிகளை ஏற்படுத்தியவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி தொனிக்காது இவர் உரையாடலை அமைத்துக் கொண்ட நயத்தக்க நாகரிகம் ரசிக்கத் தக்கது. இதற்கு இவர்இவை எல்லாவற்றையும் மீறி இவ்வளவு தூரம் உயர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இனி பேட்டி.....




வங்காள நாட்டுப் புறப் பாடலுக்கோ பஞ்சாபி நாட்டுப்புறப் பாடலுக்கோ கிடைக்கின்ற அங்கீகாரமும் அந்தஸ்தும் தமிழ் நாட்டுப் புறப் பாடலுக்குக் கிடைக்க வில்லையே?
பதில்; வங்காளத்திலோ பஞ்சாபிலோ நாட்டுப் புறப் பாடல்களுக்குப் பரந்து பட்ட தளம் இருப்பதற்கு இரண்டு காரணங்கள். அங்கேயெல்லாம் செந்நெறி இசை வாணர்கள் நாட்டுப்புறப் பாடல்களை அங்கீகரிக்கிறார்கள், அரசும் ஊக்குவிக்கிறது. தவிரவும் அப்பாடல்களில் நடனத்திற்கு எற்ற வன்பண் இருக் கிறது. நமது செந்நெறி இசை வாணர்கள் நாட்டுப்புறப் பாடல்களை அங்கீகரிப் பதும் இல்லை. நம்முடைய இசை மிகவும் நளினமும் குழைவும் மென்மையும் நிறைந்தது.
இதுதொடர்பான ஒரு துணைக் கேள்வி...... கர்நாடக கங்கீதம் தமிழ் வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்தது அன்று. நாயக்க மராட்டிய மன்னர்களால் வளர்க்கப்பட்ட அது தமிழ் மண்ணில் வேரூன்றிய அளவிற்கு நாட்டுப்புறப் பாடல்கள் வேரூன்ற வில்லையே ஏன்?
பதில்;   இதற்குத் தமிழ் இசை மரபு கோயில் சார்ந்ததாக இருந்தது ஒரு முக்கிய காரணம். இசை என்றாலே அது இறைவனின் துதியாகத் தான் இருக்க முடியும் என்கிற அழுத்தமான நம்பிக்கையின் பின்னணியில் கர்நாடக சங்கீதம் துளிர் விட்டு வளர்ந்ததில் ஆச்சரியமில்லை. நாட்டுப் புறப் பாடல்கள் மனிதனைப் பற்றியும் பேசின.
    என்னம்மா தேவி சக்கம்மா
    உலகம் தலைகீழாத் தொங்குதே
    நியாயமா?        
    இப்போ சின்னஞ்சிறிசெல்லாம்
    சிகரெட்டு பிடிக்குது
    சித்தப்பன் மாருட்டே தீப்பெட்டி கேக்குது.....
(பாடிக் காண்பிக்கிறார்)
 இப்பாடலில் உள்ள ஆதங்கத்தைக் கவனியுங்கள். இப்பாடல் தெய்வத்திடம் முறையிடுவதாகத் தோன்றுகிறதே ஒழிய சமூகம் மாற்றமடையும் போது ஏற்படுகின்ற சீரழிவைக் கண்டு வெதும்பும் மனதைத் தான் உண்மையில் சுட்டுகிறது. மனிதனையும் வாழ்க்கை அவலங்களையும் தேடலையும் வெளிப்படுத்தும் நாட்டுப் புறப் பாடல்கள் தெய்வத்திடம் முக்தியை வேண்டும் இசைவாணர்களிடமும் சமூகத்திடமும் தீண்டத் தகாததாய் இருந்ததில் வியப்பொன்றும் மில்லை.
இது தொடர்பான இன்னொரு முரண்பாடான விஷயம் என்னவென்றால் நெடிய பாரம்பரியம் இல்லாத கர்நாடக சங்கீதம் வேறெங்கிலும் இல்லாத அள விற்கு தமிழகத்தில் ஊன்றுவதற்கு இடங்கொடுத்த தமிழர்கள் நிச்சயமாக அதற்கு முன்பு வேறோர் இசை வடிவிற்கு ஆதரவாய் இருந்திருக்க வேண்டும். அது என்ன?
பதில்;கர்நாடக சங்கீதத்திற்கு முன்பு கோயில்கள் தான் இசைக்கு நிலைக்களனாய் விளங்கி வந்திருக்கின்றன. கோயிலில் பண் இசை பாடும் ஓதுவார்களைத் தவிர ஆடல் பாடல்களில் தெய்வத்தை ஆராதிப்பதை வாழ்க்கையாகவே கொண்ட இசை வேளாளர் சமுகம் இருந்து வந்திருக்கிறது. அவர்களின் இசைத் திறமையும் அச்சமூகப் பெண்களின் ஆடல்  திறனும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 13ம் நூற்றாண்டு வரை மாலிக்காபூர் படையெடுத்து வரும் வரை நம் இசைத் திறனும் ஆழ்வார் களாலும் நாயன்மார்களாலும்செழுமை பெற்று வந்தது. சங்க காலத்தைப் பொறுத்த வரை பாணர்கள் இருக்திருக்கிறார்கள். அவர்கள் பாடு பொருளாக வேந்தனையும் தலைவனையும் தலைவியையும் கொண்டு பாடினார்கள். இது பேரரசுகள் அமையும் வரையிலும் கோயில்கள் உருவாகும் வரையிலும் நீடித் தது. எல்லாக் காலங்களிலும் கிராமங்களில் கமழ்ந்து வந்தது நாட்டுப் புற இசையே. ஆனால் அது கிராமங்களுடன் நின்றுவிட்டது. கிட்டத்தட்ட பிரிட் டிஷ்காரர்கள் தான் தொல்குடிகளைப் பற்றியும் நாட்டுப்பாடல்களைப் பற்றியும் எழுதியதில் நாட்டுப் புறப் பாடல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.
தமிழ் நாடகத்தைப் பொறுத்த வரை நம் பண்டைய கூத்தின் கூறுகளை உள் வாங்கி வளரவில்லையே இதற்கு என்ன காரணம்?
பதில்;    கன்னடத்தைப் பொறுத்தவரை பி.வி.கராந்த் , யட்ச கானத்தை மீண்டும் உயிர்ப்பித்தார். பல பரிசோதனை முயற்சிகள் செய்து பார்த்தார். தமிழில் இத்தகைய முயற்சிகள் நவீன நாடகங்களில் மேற்கொள்ளப்பட்டன. தேசீய நாடகப் பள்ளியும் இங்கே காந்தி கிராமத்தின் ஆசிரியர்கள் எஸ்.பி.ஸ்ரீநிவாசன், ராமானுஜம் போன்றோருமே இத்தகைய பரிசோதனை முயற்சிகளைச் செய்யத் தொடங்கினார்கள். நவீன நாடகங்கள் இன்றும் நம் பண்டைய மரபு முறைகளை உள்வாங்கி நடந்து கொண்டு வருகின்றன.என்றாலும் இசை வழி மரபு தற்கால நாடகங்கள் எவற்றிலும் உள் வாங்கப் படாததற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. பாரம்பரிய இசையின் கூறுகளை ஓரளவு உள்வாங் கிய சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களின் ஊடே ஷேக்ஸ்பியர் நாடக வழியில் பம்மல் சம்மந்த முதலியார் நாடகங்கள் நடந்து வந்தன. மிக துரதிர்ஷ்டவசமாக நகர்ப்புற நாடக வடிவங்களாய் சம்மந்த முதலியாரின் நாடகங்களும் கிராமிய வடிவங்களாய் சுவாமிகளின் நாடகங்களும் புரிந்து கொள்ளப் பட்டதால் நகரங்கள் வளர்ந்து கிராமங்கள் தேய்ந்தது போலவே கிராமிய இசை நாடக வடிவங்களும் தமிழில் தேய்ந்து மறைந்தன.
மராட்டிய நாடகத்தில் விஜய் டென்டுல்கர் எழுதிய கன்ஷிராம் கொத்தவால் என்கிற நாடகம் இன்றும் பிரபலமாக நடந்து வருகிறது. இந்நாடகத்தின் உத்திமரபு வடிவம். ஆனால் கருப் பொருள் மரபை எதிர்ப்பது. இது போன்ற ஒரு நாடகம் உருவாகும் அளவிற்குத் தமிழ் நாடகம் வளரவில்லையே?
பதில்;    இது போன்ற நாடகங்கள் வரவில்லை என்று ஒரேயடியாக மறுத்து விடுவதற்கில்லை. பரிசோதனை முயற்சிகளில் பிணம் தின்னும் சாத்திரங் கள், இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதை ,என்னுடைய சத்திய சோதனை போன்ற நாடகங்கள் முயன்று வந்திருக்கின்றன. இவற்றில் தேவையான மரபு வடிவங்களை உள்வாங்கி தேவையற்றவற்றை ஒதுக்கி எழுதப்பட்டு நடிக்கப் பட்டு வருகின்றன.
திரைப்படத் துறையுடன் உங்களுக்கிருக்கும் தொடர்பைப் பற்றிச் சொல் லுங்கள்...
பதில்;திரைப்பட துறையைப் பற்றி எனக்கு மரியாதை ஏற்பட்டது நிமாய்கோஷ் வழிகாட்டுதலில் திரைப்படத் திறனாய்வுப் பயிற்சி பெற்ற பின்புதான். பதேர் பாஞ்சாலி போன்ற படங்களைப் பார்த்த பிறகு இந்த ஊடகத்தை இப்படியும் பயன்படுத்த முடியுமா என்கிற வியப்பும் புரிதலும் ஏற்பட்டது. இதன் பின் என் வள்ளி திருமண நவீன நாடகத்தை திரைப்பட நடிகர் நாசர்பார்த்து கவரப்பட்டு எனக்கு நண்பரானார் அவருடைய தேவதை படத்தில் ஒரு பாடல் எழுதி பாடி அக்காட்சியில் நானும் என் உதவியாளரும் நடித்தோம். அதன் பின் நண்பர் தங்கர் பச்சானின் அழகி படத்தில் நடித்தேன். அதில் வந்த கதாபாத்திரம் கட்டையனாக நான் நடித்து பலாப்பழம் தூக்கி வரும் காட்சி பரவலான கவனிப்பைப் பெற்றது. இந்த சந்தர்ப்பத்தில் தான் நாட்டுப் பாடல்களை வெளியிட்டு நான் பெறாத கவனிப்பை திரைப்படங்களில் குறுகிய காலத்தில் பெற முடிந்ததை உணர முடிந்தது. பின்னர் பாரதி படத்திலும் சிறு வேடம் ஏற்று நடித்தேன். இது எல்லாமே நண்பர்களின் வற்புறுத்தலுக்காகச் செய்தது தான். இதன் மூலம் ஒரு நன்மை விளைந்தது. நான் சார்ந்திருக்கும் துறையின் பாடத்திட்டங்களில் இது சம்பந்தமான வகுப்புகள் நடக்க நேருகையில் என்னால் இன்னும் எளிமையாகவும் புரிதலுடனும் அவற்றைக் கையாள முடிந்தது.
தாங்கள் வடு என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறீர்கள். அதைப் பற்றி?
பதில்;என் இளைமைப் பருவத்திலும் மாணவப் பருவத்திலும் பெற்ற அனுபவங்களை வைத்துத் தான் இந்த நாவலை எழுதினேன். இந்த நாவல் பரவலான வரவேற்பைப் பெற்றது. மும்பையிலிருந்து அம்பை தொலை பேசியில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார். அமெரிக்கா சென்ற சுந்தர ராம சாமி கடிதம் எழுதினார். அதுதான் புதிய பார்வையில் வெளிவந்தது. இதைத் தவிர எதிர்பாராத இடங்களிலிருந்தும் பாராட்டு. மதுரையிலிருந்து ஆர்.எஸ்.எஸ்.  தொண்டர் ஒருவர் கூடை நிறைய பழங்களை வாங்கி கொடுத் துப் பாராட்டி விட்டுப் போனார். மிகவும் ஆசாரமான குடும்பம் எங்களுடையது. தங்கள் நாவலைப் படித்ததில் ஏதோ குற்றம் செய்த உணர்வு ஏற்படுகிறது என்ற கூறிவிட்டுப் போனார். இதுபோன்ற அனுபவங்கள் நிறைய.
தலித் இலக்கியம் வளர்ந்திருக்கிறதா? தலித்களின் தற்போதைய நிலைப் பாடுகள் எத்தகைய மாற்றங்களை அடைந்துள்ளன?
பதில்;இந்திய அரசால் டாக்டர் அம்பேத்காரின் படைப்புகள் அனைத்தும் அனைத்து இந்திய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதில் தலித்துக்களின் ஒருங் கிணைப்பும் ஒத்திசைவும் இயக்கமாக உருவெடுத்து விட்டது சரித்திரத்தில் இந்த மாதிரியாக இயக்கங்கள் உருவாகும் சமயங்களில் எல்லாம் அது சம்மந் தமான கலை இலக்கிய வடிவங்கள் வீறு கொண்டு வெளி வருவது வழக்கம். அதுதான் இப்போது நடந்து கொண்டுவருகிறது. என்றைக்கும் இல்லாத அளவு தலித் புதின மற்றும் இதர கலை இலக்கிய வடிவங்கள் இன்று வெளிவந்து எப்போதும் இல்லாத அளவில் கவனிப்பையும் பெற்று வருகின்றன. இத்தனை நாளும் கவனிப்புப் பெறாத பதிவு செய்யப்படாத ஆவணங்களாக தலித் துகளின் வாழ்க்கையும் அவலங்களும் இருந்தபோத அவற்றை எல்லாம் பதிவு செய்வதற்கு வழிவகை செய்தவர் டாக்டர் அம்பேத்கார். அது எந்த அளவிற்கு இப்போது இருக்கிறது என்றால் நான் நாவல் எழுதினால் அதை மனந்திறந்து பாராட்ட அம்பை, சுந்தர ராமசாமி போன்ற தலித் அல்லாத படைப்பாளிகளும் முன் வருகிறார்கள் என்பதே. இது வரவேற்கத் தக்கது.
வடநாட்டில் வேதகாலத்துக்குப்பின் ஏற்பட்ட பக்தி இயக்கம் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வரை ஊடுருவிச் சென்று இரண்டறக் கலந்தது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை வேதங்களைப் போற்றிய ஆன்மீகம் தன்ன ளவில் நின்றது போலவே அதன்பின்  வந்த பக்தி இயக்கமும் தன் அளவில் நின்று விட்டது. இதற்குக் காரணம் என்ன?
பதில்;ராமானுஜரை விரட்டி அடித்தவர்கள் தானே நாம்? காரணம் என்று பார்த்தால் எவ்வித மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளத் துணியாத மனப்பக் குவமின்மையும் விழிப்புணர்வின்மை யும் தான். நந்தன் கோயிலுக்குள் செல்ல எத்தனிக்கையில் மூவாயிரம் வேதியர் அவனைத் தடுத்து நிறுத்தியது இதனால் தானே.
பக்தி இயக்கங்கள் செய்யத் தவறியதை இவர்கள் செய்வார்கள் என்று நம்பித் தானே திராவிட இயக்கங்களைப் பெருவாரியான அடித்தட்டு மக்கள் ஆதரித்தார்கள்? ஆனால் திராவிட இயக்ககங்கள் பக்தி இயக்கம் போலவே ஜாதீயக் கட்டுமானம் சிதையாமல் பார்த்துக் கொண்டது என்று கூறினால் ஒப்புக் கொள்வீர்களா?
பதில்;ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணமாக நான் நினைப்பது தந்தை பெரியார். தான் இயக்கம் ஆரம்பித்து நடத்தி வந்த போது தன்னைப் போல் சமூக இயக்கங்கள் நடத்தி வந்த அயோத்திதாச பண்டிதர் போன்ற மற்ற ஆர்வலர்களையும் அங்கீகரித்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல அவர்களையும் அரவணைத்துச் செல் லாதது தான் காரணம் என்று நினைக்கிறேன். ராஜா, இரட்டை மலை சீனி வாசன், அயோத்தி தாச பண்டிதர் போன்றவர்கள் நடத்திய இயக்கங்கள் கவனிப்பு பெறாமல் போனது சரியல்ல.
தங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
பதில்;நவீன நாடகங்கள், புதினங்கள், இசை வடிவங்கள், திரைப்படங்கள் இப்படி நிறைய.. சுருங்கச் சொன்னால் இயங்கி கொண்டிருக்க வேண்டும். இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் திட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...