சனி, 2 ஜூன், 2012

தி.ஜா.வின் எழுத்துலகம்





    ஜானகிராமனின் மாஸ்டர் பீஸ் என்று மோகமுள் அழைக்கப்படுகிறது. தரத்தில் மட்டுமல்லாது கனத்திலும் பெரிய நாவல். மோகமுள் படித்தவர்கள் கும்பகோணம் போனால் துக்காம்பாளையம் தெரு எது என்று கேட்காமல் திரும்ப மாட்டார்கள். அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய நாவல்.
    ரேழியுள்ள வீடுகளும் நடு முற்றங்களும் காவேரியும் வெற்றிலை சீவலும் செவலை மாடும் கர்நாடக சங்கீதமும் வேறெங்காவது இவ்வளவு பிராதான்யம் பெற்றிருக்குமா சந்தேகமே. அதுவும் அந்தப் பெண்கள்! 'அன்பே ஆரமுதே' டொக்கி எதிராஜு படம் போடுகிறது போல் கோலம் போடுகிறாள். 'அம்மா வந்தாளின்' அலங்காரத்துக்கு வரும் கனவுகள் நிஜ வாழ்க்கை வண்ணங்களையும் சித்திரங்களையும் தோற்கடிக்கின்றன. 'மோக முள்ளின்' யமுனாவோ கேட்கவே வேண்டாம். டொக்கியின் வார்த்தையில், ‘ மல்லிகைப் பூவால் ஜோடிச்ச கை தான் அது; எலும்பாலும் சதையாலும் வனையப் பட்டதன்று ‘செம்பருத்தி நாயகியை நினைக்கும் போதெல்லாம் செம்பருத்திப் பூ தான் நினைவுக்கு வருகிறது. அவ்வளவு கவர்ச்சிகரமான எழுத்து.
    'ஜானகிராமனுக்குப் பெண்களையே தெரியாது;அறிந்ததில்லை' என்றார் அம்பை ஒரு முறை. மிகவும் வசீரமான வாதம்- ஜானகிராமனின் பெண்களைப் போலவே. கற்பனையும் மண்வாசனையும் கனவும் அழகும் சங்கீதமும் குழைத்து வனையப்பட்ட அவர்கள் தரையில் நடக்கிறவர்கள் தானா என்று சிலர் சந்தேகிப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஜானகிராமனையே 'அன்பே ஆரமுதே'யில் வரும் அனந்தசாமி போன்ற ஒரு நபராகத் தான் கற்பனை செய்ய முடிகிறது.
    அனந்தசாமிக்கு கல்யாணம் நிச்சயம் செய்கிறார்கள். விளக்கு மாதிரி வெளிச்சமாக இருக்கிறது பெண் - அனந்தசாமிக்குக் குற்றவுணர்ச்சி -  இவ்வளவு அழகான பெண்ணையா திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று. சாப்பிடுவதற்கு இலை போடுகிறார்கள்  இலையில் குட்டி உருவமாக விவேகானந்தர் மேலேயும் கீழேயும் நடக்கிறார் 'எங்கேடா வந்தே?' என்று கேட்டுக் கொண்டு. பிடுங்கல் தாங்காமல் கல்யாண வீட்டிலிருந்து அனந்த சாமி ஓடி விடுகிறார். இதே போன்ற ஒரு ஆச்சரியம், பிரமிப்பு, பயம், தாழ்மை யுணர்ச்சி போன்ற அனைத்தையும் ஜானகிராமனிடம் நாம் காண முடிகிறது. பெண் எப்போதும் விஸ்வரூபம் எடுக்கிறாள் ஆண் கடுகளவு சிறுத்து விடு கிறான். இதை அவர் புனைந்து செய்தார் என்பதைவிட அவரின் பொதுப் படையான தன்மை என்று கூறி விடலாம்.
    பின்னால் இதைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டார். 'மரப்பசு'  நாயகி அம்மணி கடைசி யில் ப்ரூஸ் என்கிற அமெரிக்கனிடம் தோற்றுப் போகிறாள். கோபாலி யையும் பட்டாபியையும் சக்கையாகப் பிழிந்து விடும் அம்மணி கடைசியில் இராணுவ வீரனுக்கு ஆட்பட்டு தன் மீதான கழிவிரக்கத்தில் குமுறுகிறாள். நள பாகத்தின் சாரங்கனும் இதே பாணியில் செல்வதாகத் தெரிகிறது.
    அவர் நளபாகம் எழுதின காலங்கள் எல்லாம் அவரின் கடைசி நாட்கள். கும்பகோணம் போகலாம் என்று வந்து விட்டு தங்க உத்தேசித்திருந்த நாட்கள். முழுமைக்கும் தங்காமல் டெல்லி திரும்பிய காலம். தஞ்சாவூர் என்கிற முள் அவரைக் குத்திக் கொண்டிருந்தது ஜீவ அவஸ்தையின் வாதை தாங்க முடி யாமல் அவர் எழுதிக் கொண்டிருந்ததையும் மீறி ஆயாசமும் அயர்ச்சியும் மிகுந்தது. ஜப்பானிய மொழியில் ஹரகிரி என்பார்கள். அவர் வாழ் நாள் பூரா வும் செய்து கொண்டிருந்த ஹரகிரி என்னும் தற்கொலை முடிவுக்கு வந்து கொண்டிருந்தது.
    பல முற்போக்குவாதிகளும் இலக்கிய முனைவர்களும் அவரை அறவே ஒதுக்கித் தள்ளினர்.
    'அம்மாவந்தாளின்' சிவசுக்கும் அலங்காரத்திற்கும் முறை தவறிப் பிறந்த குழந்தைகளுடன் சகோதரனாக இருக்க வேண்டிய கட்டாயம் வேத விற்பன் னனாகிய கதாநாயகனுக்கு- ஒழிந்த வேளைகளில் தெருப் பையன்களுடன் கபடி விளையாடும் கதாநாயகன் மேல் விதவைப் பெண்ணிற்குக் காதல் மலர்ந்து விடுகிறது. அம்மா வந்தாள் முப்பதுகளில் எழுதப்பட்ட நாவல். பெரிய பெரிய சமூக சீர்திருத்தவாதிகள் எழுத யோசித்துக் கொண்டு தயங்கிக் கொண்டு இருந்த காலத்தில் சர்வ சாதாரணமாக ஜானகிராமன் 'அம்மா வந் தாளில்' பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்தார் (ஊர்ப் பிரஷ்டத்தை ஏற்க நேரிட்ட போதும் கூட)
    நளபாகத்தின் வத்ஸன் கூடைக்காரியிடம் சல்லாபம் செய்கிறார். சாமி பிரியம் என்று அவள்  வீட்டினுள்ளேயே வந்து விடுகிறாள். சாமி பிரியம் கடைசியில் சிஃபிலிஸில் கொண்டு போய் விட்டு விடுகிறது. நாயகன் சாரங்கன் தான் சமைக்கும் வீட்டுக்காரரின் மனைவியை நெருங்குவது யோகத்துக்குச் சமமாகச் சித்தரிக்கப்படுகிறது. அந்நாவலில் வரும் பகுத்தறிவுவாதி கூட சாரங்கனின் தெய்வீக ஆற்றலை வியந்து அவனிடம் பெரு மதிப்பு வைத்திருக்கிறான்.
     'அன்பே ஆரமுதேயின்' அனந்தசாமி கடைசியில் தான் திருமணம் செய்ய மறுத்த ருக்மணியின் வீட்டின் ஒரு போர்ஷனில் வாழ மனம் ஒப்புகிறார். அதில்  வரும் டொக்கி என்கிற பெண்ணின் வாழ்வைக் கெடுத்த ஹீரோ அருண் குமார் அனந்தசாமியின் வார்த்தைகளில் உத்தமமான சிஷ்யன் - அனந்தசாமி தன் சிநேகிதர் பாகவதரிடம் கொல்கிறார்; 'பாகவதர்வாள்! உம்ம சிஷ்யனைப் போல ஒரு உத்தமான சிஷ்யனைப் பார்த்ததில்லை.'
    ஜானகிராமன் எப்படிப்பட்டவர்? அவரே ஒரு முறை சொன்னது போல், ச்ருதி சுத்தமான சங்கீதத்தைக் கேட்டால் கண்களில் நீர் நிறைந்து விடுகிறது என்று. அதுபோன்ற நெட்டுயிர்ப்பில் தான் எழுதினாரா? பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பின் ஊடே வளர்ந்து அதில் இருக்கும் குறைபாடுகளைக் கண்ணுற்று அதிலிருந்து பெருகிய தொகை தான் ஜானகி ராமனா? அவசியம் பாற்பட்ட சநாதனக் கருத்துக்களை வைத்துக் கொண்டு பிறவற்றைக் தூக்கி எறிந்த வரம்பு மீறாத புரட்சியாளரா? உணர்ச்சிப் பெருக்கில் கரைகளை உடைத்துக் கொண்டு பாய முயன்ற காட்டாற்று வெள்ளமா? ஜானகிராமன் எப்படிப் பட்டவர் என்பதை விளக்குவது கொஞ்சம் கடினம் தான்.
    அவர் நாவல்களில் அவரையே அறியாமல் பதிந்து கிடக்கும் வீடு மாற்றுவதை நாம் அவரின் ஒழுங்கு முறைகளை மாற்ற விழைகிற. அவாவின் குறியீடாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. பழைய வீடுகளை வெள்ளையடிப்பது, வீடு மாற்றுவது, கட்டாயம் அவர் நாவல்களில் இடம் பெறும் நிகழ்வுகள். மரபு சார்ந்த விஷயங்களை அப்படியே ஒதுக்கிவிட்டு திருத்திய புது வாழ்க்கையை அவர் கனவில் வாழ முயன்றது பல இடங்களில் புலப்படுகிறது. மரபு சார்ந்த மனிதர்கள் பல இடங்களில் வில்லன்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். யமுனாவின் அண்ணன், 'மோக முள்ளில்' யமுனாவிற்குச் சேர வேண்டிய நெல்லை அளக்க மறுக்கிறார். கண்டு சாஸ்திரி 'மரப்பசுவில்' நாட்டுப் பெண்ணுக்கு மொட்டையடிக்கும் சடங்கைச் செய்கிறார். அலங்காரத்தம்மா சாஸ்த்ரோக்தமான  சநாதனியின் மனைவி  சிவசுவிடம் சோரம் போகிறாள். சநாதனிகள் இப்படியென்றால் சாதாரணக் கதை மாந்தர்கள் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள் 'மரப்பசுவின்' அம்மணி கடைசியில் மரகதம் என்கிற வேலைக்காரியுடன் தங்க நிச்சயிக்கிறாள். சாம்பல் பூத்த நெருப்பு மாதிரிக் கனன்று பாடும் கோபாலி, தலையால் இட்டதைக் காலால் செய்யும் பட்டாபி, குதிரை சக்தி கொண்ட இராணுவ வீரன் ப்ரூஸ் மற்றும் ஏனையோரிடம் ஸ்வாரஸ்யம் இழக்கும் அம்மணி கடைசியில் வேலைக்காரி சகிதம் மிச்ச வாழ்வை ஓட்ட முடிவு செய்து விடுகிறாள்.
    'பரதேசி வந்தான்' என்கிற சிறுகதையில் சாப்பிட உட்காரும் பரதேசியை எழுப்பு விடுகிறார் வீட்டுக்காரர். பரதேசி பத்தாம் நாள் வருகிறேன் என்று சூளுரைத்து விட்டுப் போகிறான். சொன்னபடி பத்தாம் நாள் வீட்டுக்காரர் பிள்ளையின் சாவுக்கு வந்து விட்டு போகிறான். சநாதனிகள் ,லஞ்சம் வாங்குகிறவர்கள், ஊரை அடித்து உலையில் போடுகிறவர்கள், பெண்களை மொட்டை யடிப்பவர்கள், கல்யாண வீட்டில் போய்  வயிற்றெரிச்சலில் பாயசத் தில் எலி விழுந்துவிட்டது என்று கவிழ்க்கிறவர்கள். சாதாரணர்கள் அசாதாரண நிலைக்கு உயர சநாதனிகள் இழிவாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். புதிதாக மதம் மாறியவர்கள் ஏற்கெனவே அம்மதத்தில் இருப்பவர்களை விட வெறியர்களாக இருப்பது போல் தான் இதுவும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
    ஆரம்பத்தில் இருந்து சகோதரன் சகோதரி என்று பாதி கதையை வளர்த்து விட்டுப் பின்னர் தடலடியாக வேறு உறவு என்று மாற்றுகிற அதிர்ச்சிகர ரஸ வாதம் ஜானகிராமனுக்குக் கை வந்த கலை. அதை அவர் புனைந்து செய்யவில்லை. பல வித முடிவுகளுக்கு அவர் வரக் காரணமாயிருந்த அதே மாந்தர்களும் ஊரும் மேற்கூறிய அதிர்ச்சி சம்பவங்களுக்கு முகாந்திரம்.
    தஞ்சாவூர் கும்பகோணம் என்கிற முள் அவரை எப்போதும் குத்திக் கொண்டிருந்தது. அதன் மாந்தர்களும் நிதர்சனங்களும் தான் சாஸ்வதம் என்கிற ஆற்றாமை. அந்த `ஆற்றாமை தான் அவரின் நாவல்கள். அந்த நாவல்களின் வளர்ச்சியினூடே அவர் பார்த்து வியந்த கிராமங்கள். அவரின் நெட்டுயிர்ப்பில் வளர்ந்த ராம ராஜ்யமாக இல்லாது வாழ்க்கையின் இருண்மைப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய நிதர்சன உலகை அவ்வப்போது உள்வாங்கிஅசுர வளர்ச்யிடைந்த விஷ விருட்சத்தைப் பார்த்த ஏமாற்றம். இது தான் ஜானகி ராமன். அவர் நிராசையாகத் தான் இறந்தார். இறந்திருக்க வேண்டும் புரட்சியில் பங்கு கொள்கிற பலர் புரட்சியின் பிறகு ஏற்படுகிற மாற்றத்தில் தெருவில் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடும் என்று நம்பிக் கடைசியில் புரட்சிக்கு முன்பிருந்ததை விட அலங்கோலமும் அராஜகமும் அவ மரியாதையும் ஆட்சி செய்யும்  அவலத்தைப் பார்த்து வெதும்புவது போல் தான் ஆயிற்று கடைசியில் ஜானகிராமனின் நிலைமை.
    வி.ஸ. காண்டேகர் இவ்வளவு அவதியுறவில்லை.வால்மீகி வேடனைப் பார்த்து இட்ட சாபத்தை மட்டும் வைத்துக் கொண்டு 'கிரௌஞ்ச வதம்' என்கிற நாவலை எழுதினார் சடங்குகளில் நம்பிக்கையுள்ள சநாதனியும் அவற்றைச் சாரும் புரட்சியாளனும் கடைசியில் ஒரே நோக்கில் தான் செயல்படுகிறார்கள் என்கிற அத்வைத சித்தாந்தத்தை அவர் வெறும் ஒரே ஒரு சுலோகத்தை வைத்துக் கொண்டு நிறுவியிருந்தார். மனித குலம் தோன்றிய  நாள் முதலாக இந்த சம்வாதம் நிகழ்ந்து கொண்டிருப்பதாய்த் தான் தோன்றுகிறது. யுலிஸிஸ் பல்வேறு கண்டங்களை தரிசித்து புதுப்புது அநுபவங்களைப் பெற விரும்புகிறான் என்றால் அவன் பிள்ளை டெலமாகஸ் தம் மக்களை முன்னேற்றுவதே தலையாய கடமை என்று நினைக்கிறான். வாழ இரண்டும் தான் வேண்டியிருக்கின்றன. ஒன்று நிர்மாணம் என்றால் மற்றொன்று விடுதலை.
    இந்திய சுதந்திர விடுதலையை ஒட்டி வந்த தலைமுறைக்கு சமூக விடுதலை மிக முக்கியமாகப் பட்டிருக்கிறது. ஜானகிராமன் போன்ற ஒன்றிரண்டு பேர் அத்துடன் மன விடுதலையையும் சேர்த்துக் கொண்டிருக் கிறார்கள்.
    சநாதனமா நூதனமா என்றால் ஜானகிராமனின்  ஓட்டு நூதனத்துக்குத்தான். இவையிரண்டிற்கும் துலாக்கோல் போன்று எழுதியவர்கள் உண்டு. ஜானகிராமன் அதுபோன்ற நடுவு நிலை எடுக்க வில்லை நல்ல வேளையாக. அவ்வாறு அவர் எடுத்திருந்தால் காவிரியும் சங்கீதமும் துக்காம் பாளையத் தெருவும் நெல் குதிரும் நடு முற்ற வீடும் சலசலக்கும் தென்னங் கீற்றுக்களும் மனவெளி மனிதர்களும் கனவும் கற்பனையும் மேன்மையும் பெண்மையும் குழைத்து வனையப் பட்ட பெண்களும் நமக்குக் கிடைத்திருப்பார்களா என்பது சந்தேகமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...