புதன், 9 நவம்பர், 2016

முக நூலர்களின் முகவரிகள் III


பதிவுகள் செய்யப் பத்து கட்டளைகள்:

1. மொழி: பண்டிதத் தமிழில் எழுத கூடாது. யாரும் படிக்க மாட்டார்கள். மொக்கை, மெர்சல், தரியல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். சொன்னார்கள் என்பதை 'சொல்லிட்டாங்கேய்' என்றால் தான் மரியாதை. புது வார்த்தைகளுக்கு அகராதிகளை புரட்ட வேண்டிய அவசியம் இல்லை. நான்கைந்து திரைப்படங்களை பார்த்தாலே போதும்.
2. கூடிய மட்டில் சுருக்கமாகப் பதிவுகள் இருக்க வேண்டும். ஒரு வரி அல்லது ஒற்றை வாக்கியம் போதுமானது. அது கூடிய மட்டில் சினிமாவில் வருகிற 'பன்ச் டயலாக்' மாதிரி இருந்தால் நல்லது. இளம் பெண்களாக இருந்தால் 'வானத்தில் சிட்டுக் குருவியைப் பார்த்தால் றெக்கை கட்டி பறக்குது மனசு' என்று சந்தேகாஸ்பதமாக சொல்லிவிட்டால் போதும். போகிற வருகிறவர்கள் 'லைக்குகளை' அள்ளி விடும்.
3. நல்ல சமுதாயத் தாக்கத்துடன் இருக்க வேண்டும். லஞ்சம், ஊழல்,எதேச்சாதிகாரம் போன்றவைகளுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டும். (அந்தரங்கத்தில் நாம் சற்று முன்னே பின்னே இருந்தால் பரவாயில்லை).
4. அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபலங்களைத் திட்ட வேண்டும். (கொஞ்சம் ஆபத்தான வழி; திருப்பி கேவலமாகத் திட்டுவார்கள் அந்தந்த பிரபலங்களின் அபிமானிகள் . பொறுத்துக் கொள்ளத்  திராணி வேண்டும்.
5. மனைவிகள் கூடிய மட்டில் சம உரிமை பேச வேண்டும். (பெண்ணியம் பேசிய மாதிரியும் ஆயிற்று; வீட்டில் படுத்தும் கணவனை இடித்த மாதிரியும் ஆயிற்று.)
6. அடுத்தவர் போடும் பதிவுகளை பகிருவது. மிகவும் பாதுகாப்பான வழி. நாம் என்ன நினைக்கிறோம் என்பதைக் கடைசி வரையில் சொல்லவேண்டாம். இது இரண்டு மூன்று வகை. அப்துல் கலாம் அய்யா அல்லது பெருந்தலைவர் காமராஜர் படங்களை பகிர்ந்து கொண்டால் வம்புக்கே வேலையில்லை. எல்லோரும் அங்கீகரிக்கும் தலைவர்கள் இவர்கள்.
7. செயற்கரிய செயல்களை செய்பவர்களை பற்றிய செய்திகளை பாதுகாப்பாகப் பகிரலாம். விளையாட்டில் பதக்கம் வாங்குகிறவர்கள், ஏழ்மை நிலையிலிருந்து முன்னுக்கு வருகிறவர்கள்,  விட்டுச் சென்ற சாமானை நேர்மையுடன் திருப்பிக் கொடுத்த ஆட்டோ டிரைவர், நேர்மையான போலீஸ் அதிகாரி போன்றோர் பற்றிய பதிவுகள் இதில் சேரும்.
8. வைத்தியத்துக்கான ஆலோசனைகள். இதற்குச் சில குழுக்கள் உண்டு. அவற்றின் பதிவுகளை பகிரலாம். அல்லது நாமே தெரிந்ததைச் சொல்லலாம். யாரும் முயற்சி செய்யப் போவதில்லை என்பதால் பக்க விளைவுகள் பற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.
9. பதில் போடுவதற்கு சில வழி முறைகள் உண்டு. ஒரு நகைச்சுவை நடிகர் படம் போட்டு 'கெளம்பிட்டாங்கைய்யா கெளம்பிட்டாங்கெய்' அல்லது 'வெச்சுட்டான்யா ஆப்பு' என்று போடுவது இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கான தகுதியை உண்டு பண்ணும். இல்லாவிட்டால் ஒரு பெரிய 'ஸ்மைலியைப்' போடலாம். 'பின்னிட்டே தலீவா' அல்லது 'கொன்னுட்டீங்க மேடம்' என்பதுடன் நிறுத்திக் கொள்வது நல்லது.
10. நம் படங்களை அடிக்கடி மாற்றுவது; அல்லது புதிது புதிதாகப் போட்டுக் கொண்டிருப்பது. பெண்களாக இருந்தால் இதற்குப் பெரிய வாசகர் வட்டம் உண்டு.

செவ்வாய், 8 நவம்பர், 2016

முக நூலர்களின் முகவரிகள் II

முக நூல் ஒரு பரந்து பட்ட தளத்தைத் தருகிறது. இதை உபயோகிப்பவர்கள் வருமாறு:
1. பொதுவாக சுய விளம்பரத்தில் மோகம் கொண்டவர்கள். இதில் யாருமே விதி விலக்குக் கிடையாது (நான் உள்பட). பெரிய தகுதி இல்லாமல் என்னால் இதைத் தேடிக் கொள்ள முடிகிறது. காரணம் என்னுடைய இலக்கு ரசிகர்களை நானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது. என் நண்பர் எனக்கு 'லைக்' போட்டால் நான் அவருக்கு 'லைக்' போடுகிறேன். நீ எனக்கு சொறிந்து விடு; நான் உனக்கு சொறிந்து விடுகிறேன்' பாணியில்.
2. முக்கியத்துவத்துக்காக ஏங்கும் சாதாரணர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் கடை நிலை ஊழியர் சபரி மலைக்கு குருசாமியாக இருப்பது போன்றது தான் இதுவும். மேலதிகாரியாகப் பணியாற்றுபவர் கன்னி சாமியாக வந்து குருசாமி காலில் விழுந்தால் அதில் ஒரு குரூர திருப்தி.
3. ஒழுங்கு படுத்தப் படாத துறைகளில் இருப்பவர்களுக்கு இது போன்ற விளம்பரங்கள் உறு துணையாக இருக்கின்றன. பாடகர்கள், ஆக முயற்சிப்பவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் படைப்புகளுக்கு இலவச விளம்பரங்கள் முக நூல் தருகிறது. இதில் அரசியல்வாதிகளும் விதி விலக்கல்ல.
4. யுவ யுவதிகளும் அவர்களின் அவதிகளும். முக்கால் புகைப் படம் காலே அரைக்கால் கார்ட்டூன் முகம், மீதி என்ன மொழி என்று புரிந்து கொள்ள முடியாத ஒற்றை வரி விமர்சனம்... யாருக்கோ மறைமுகமாக ஏதோ தெரிவிக்க விழைவது போன்ற ஒரு தோற்றம்.
5. முதிர் மக்கள். குறிப்பாக முதிர் கன்னியர். விருப்ப ஓய்வு வாங்கி வீட்டில் இருப்பவர்கள் 'இது நாள் வரையிலும் வாணாளை வீணாக்கி விட்டதாக' பிரலாபித்துக் கொண்டிருப்பார்கள். உடற் பிணி பற்றிய குறிப்புகள் இருக்கும். பெரிய தொந்தரவு இல்லை. முதிர் ஆண்களை பொறுத்தவரை சாமி படங்களாக இருக்கும். தாம்பத்திய விரக்தி!
6. வெள்ளைக்காரர்கள். என்ன சொல்கிறார்கள் என்றே புரியாது.
7. இன மொழி மத ஜாதி செயற்பாட்டாளர்கள். தள்ளி இருப்பதே நல்லது.
8. பொழுது போகாதவர்கள்.

திங்கள், 7 நவம்பர், 2016

முக நூலர்களின் முகவரிகள் I


சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்த நண்பர் நான் கைபேசியுடன் அவ்வப்போது மும்முரமாய் இருப்பதை ஸ்வாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதுமே அவர் சளசளவென்று பேசிக்கொண்டிருப்பார். நான் கேட்டுக் கொண்டிருப்பேன்;அல்லது அவர் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பேன். வழக்கத்திற்கு மாறாக அவ்வப்போது நான் இடைவெளி விட்டு கைபேசியை நோண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த  அவரை நான் உதாசீனப் படுத்துகிறேன் என்று அவர் நினைக்க இருந்த வாய்ப்பை நான் பொருட்படுத்தாமல் இருந்தது அவரை மிகவும் ஆச்சர்யப் படுத்தியது. எனக்கும் சற்று வியப்புத் தான். இதில் எப்படி இறங்கினேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். மேஜைக் கணினி வரையில் சற்று சுமாராகப் போய்க் கொண்டிருந்தது. ஆண்ட்ராய்டு கைபேசி வந்தவுடன் தான் சற்று அதீதமாகப் போய் விட்டது. முக நூல் அல்லது வாட்ஸ் அப்; ஒழிந்த நேரங்களில் யு ட்யூப்.
பாராயணம் செய்து கொண்டிருந்த அபிதான சிந்தாமணியை அவ்வப்போது புரட்டுகிறேன். ராமாநுஜாசார்யாரின் மஹாபாரதம் அப்படியே இருக்கிறது. பவர் என்னும் புத்தகம், மார்கோ போலோவின் பயணக்  குறிப்புகள், நூலகத்திலிருந்து கொண்டு வந்த புயலில் ஒரு தோணி, உபநிடத சாரம், சாமி சிதம்பரனார் குறித்த புத்தகம், குற்றாலக் குறவஞ்சி, சம்பிரதாய பஜனை, ஜூலியஸ் சீசர், சித்தர் பாடல்கள், எ  பியூட்டிபுல் மைண்ட், சமஸ்க்ருத பாடங்கள், பகவத் கீதை ............... படிக்க வேண்டியது சேர்ந்து கொண்டே போகிறது.
போதும் போதாததற்கு சன் டிவியில் குஷ்பூவின் பஞ்சாயத்து வேறு...
ஹூம் ....!

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...