ஞாயிறு, 21 மார்ச், 2021

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம் 

இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்கள். இவர் இல்லுமினாட்டி என்கிற உலகை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு ரகசியக் குழுவின் உறுப்பினர் என்றும் கிறிஸ்துவ மத மாற்றக் குழுக்களுக்கு உதவி செய்ய இறக்கி விடப்பட்டிருக்கிறார் என்றும் பேச்சு. இதற்கு பதிலாக எதிர் கோஷ்டியினர் இவர் பாஜகவின் பி டீம் என்று கழுவி ஊற்றுகிறார்கள். திரைப்பட நடிகர் கமலஹாசன் குணாதிசயக் கூறுகளை உன்னிப்பாக கவனிக்கும் எவரும் அவற்றில் காணப்படும் முரண்கள் இது போன்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுப்பதாகவே புரிந்து கொள்வார்கள். அவர் இயல்பு. 'உதயநிதியை சந்தித்தீர்களா?' என்று நிருபர் கேட்டதற்கு இவர் அளித்த பதில் இவரை எல்லோரும் பயங்கரமாக நையாண்டி செய்யக் காரணமாய் அமைந்து விட்டது.

நல்ல நடிகர், நடனம் ஆடுபவர், சினிமாவின் சகல துறைகளையும் நுணுக்கமாக அறிந்தவர், பாடக்  கூடியவர், பல மொழிகளிலும் உரையாடும் ஆற்றல் பெற்றவர், கடும் உழைப்பாளி போன்ற பல திறமைகளுக்கு சொந்தக்காரர். அரசியலில் இறங்கித்தான் பிரபல்யம் தேட வேண்டும் என்கிற தேவை இல்லாதவர் என்னும் போது இவர் எதற்கு அரசியலுக்கு வருகிறார் என்கிற கேள்வி வருகிறது.

மற்றவர்களுக்கு இல்லாத எந்தத் தகுதி கமலஹாசனுக்கு  இருக்கிறது? அவர் சினிமா நடிகர் என்கிற ஒரே தகுதி தான். 'கரிஷ்மா' உள்ள நடிகர் அதுவும். இது இருந்து விட்டால் ஜாதி, மொழி, மத, குழு, இன வாதங்கள் எல்லாம் அடி பட்டுப் போகின்றன. இது தமிழ் நாட்டின் பிரத்யேக நிலை. இதன் உளவியல் காரணங்களை நாம் மன்னன் மீதுள்ள பிரேமையால் தன் தலையை வெட்டி பலி பீடத்தில் வைக்கும் தொல்குடி இளைஞனின் மரபில் தான் தேட வேண்டும்.

 பாடுவதற்கு இரவல் குரல், ஆடுவதற்கு டான்ஸ் மாஸ்டரின் பயிற்சி, சண்டை போட ஸ்டண்ட் மாஸ்டரின் பயிற்சி, தவிர சினிமாவுக்குள் பறந்து பறந்து அடிப்பது போன்ற தந்திரங்கள் இவை மூலம் ஒரு சூப்பர் மனிதனை சினிமா ஸ்ருஷ்டிக்கிறது. இதை வைத்து இவர்கள் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாது மக்களின் வாழ்க்கையிலும் அரசிலும் கோலோச்ச முயலுகிறார்கள். காரணம் நாளாக நாளாக சினிமா தன்னைப்  பற்றி கட்டமைத்திருக்கிற பிம்பம் உண்மை என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள். இப்படிப் பார்க்கும் போது இவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்று தான் தோன்றுகிறது. 

இதையும் மீறி கமலஹாசன் அரசியலுக்கு வருவதற்கான ஒரு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. இவர் திறமைகளை விட்டு விடுவோம். வீட்டில் கடைசியாகப் பிறந்த இவர் உண்மையில் அன்னையின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு வாயில் விர ல் சூப்பிக் கொண்டு எப்போதும் கவனிப்பு வேண்டி நிற்கும் சவலைப் பிள்ளை. வயது அறுபதைக் கடந்த பின்னும் இன்னமும் பெண் துணையை இவர் இன்றளவும்  நாடி வருவது இதற்காகத் தான் என்று தோன்றுகிறது. இவர் தன்னைப் பெரியாரின் சீடர் என்று சொல்லிக் கொள்வதும் இந்து மத இழிவுப் பேச்சுக்களை உதிர்த்து வருவதும் இதன் பாற்பட்டே என்று தோன்றுகிறது. இது போன்ற ஒரு கவனிப்பை அரசியலில் காண இவர் விழைகிறார் என்று தோன்றுகிறது.

இவரிடம் மேற்கூறிய விஷயங்கள் தவிர இன்னம் சில நல்ல விஷயங்களும் உண்டு. இவர் ஒழுங்காக வருமான வரி கட்டுகிறவர் என்கிறார்கள். இறந்த பிறகு உடலை மருத்துவ மனைக்கு தானம் செய்யப் பதிவு செய்திருக்கிறார். தேர்தல் அறிக்கையில் கூடிய மட்டும் தேசிய நிலைப் பாட்டைக் கொண்டு வரைந்திருக்கிறார்.

இவரை நாம் ஏன் நிராகரிக்க வேண்டும்?

மாநில முதல்வரை சாதாரண மனிதன் சந்திக்க முடியாத நிலை நிலவும். மாட்சிமை இல்லாத அதிகார மையங்கள்  கோலோச்சிக் கொண்டிருக்கும். கடைக் கோடி மனிதனின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது.

இப்படிப் பார்க்கும் போது மக்கள் நீதி மய்யம் நம் தேர்தல் கவுண்ட் டவுனில் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது.


பின் குறிப்பு: பழ.கருப்பையாவைக் கூட சேர்த்துக் கொண்டிருக்கிறார். 'தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீர இடும்பை தரும்' என்கிற குறள் நினைவுக்கு வருகிறது. வேலியில்  போகிற ஓணானை மடியில் விட்டுக் கொண்டு பின் 'குத்துதே குடையுதே' என்று கத்திப் புண்ணியமில்லை.


சனி, 20 மார்ச், 2021

வாய்ப்பில்லை ராஜா!

 

தேர்தலுக்குப் பதினைந்து நாட்கள் இருக்கிற நிலையில் கட்சிகள் கவுண்ட் டௌனை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் நாம் தமிழர் கட்சி. 

இந்தக் கட்சி சீமான் என்கிற ஒற்றைப் படைத் தலைமையை நம்பி உருவாக்கப் பட்ட இயக்கம். சினிமா, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் துதி, தமிழ் தேசியம், கிட்டத்தட்ட காந்தியத்தைக் காப்பி அடிக்கும் அரைகுறை பொருளாதார அறிவு, வெகு ஜன மந்தை மனப்பான்மையை கவர்ந்து எடுக்கும் விதமான வெற்று கோஷங்கள், இந்திய இறையாண்மைக்கு வெற்று சவால்கள் விடுத்துக் கொண்டிருப்பது இவை போன்ற கோளாறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஹிட்லரின் மெய்ன் காம்ப் புத்தகத்தைப் படிக்கும் எவரும் சீமான் ஹிட்லரின் வெகு ஜனத்தைக் கவர்ந்து இழுக்கும் ஹிட்லரின்  உத்திகளைக் கூசாமல் பின் பற்றுகிறார் என்று எளிதாகச் சொல்ல முடியும்.

இவரின் நல்ல விஷயங்கள் என்ன?

1. மிகவும் கவர்ச்சிகரமான ஆக்ரோஷமான பேச்சாளர். இவர் பேச்சைக் கேட்கும் எவரும் இவரை விரும்பாமல் இருக்க முடியாது. என்ன  அபத்தமாகப் பேசினாலும் அதை வசீகரமாக மாற்றுகிற உடல் மொழி.

2. ஊழல் குற்றச்சாட்டு கிடையாது. ஏன் என்றால் இவர் ஆட்சியில் இல்லை.

3. 234 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் போட்டி இடும் அசாத்தியத் துணிச்சல்.

4. தேர்தல் போட்டியில் உண்மையாகப் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்தது. எந்த அரசியல் கட்சியும் செய்யத் துணியாதது இது.


இவரை நாம் நிராகரிப்பதற்கான காரணங்கள்:


1. வெளிநாட்டைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆதரவாளர் என்று சொல்லிக் கொள்கிறார். பிரபாகரன் கருத்து வேறுபாடுகளை சமாளிக்கக்  கையாண்ட ஒரே வழி தீர்த்துக் கட்டுவது. ராஜீவ் காந்தி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தங்கத்  தாம்பாளத்தில் வைத்து நீட்டினார். அதை எட்டி உதைத்து ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தனர் புலிகள். அவர்களை போற்றுகிற சீமானை நாம் ஆதரிக்க முடியாது.

2. மத்திய மாநில அரசுகளை, இந்திய இறையாண்மையை வெறுப்பது. இது எந்த அளவுக்கு என்றால் 'தடுப்பூசி முதலில் மோடியும் எடப்பாடியும் போட்டுக் கொள்ளட்டும்; பின் நான் போட்டுக் கொள்கிறேன்' என்பது. இப்போது இருவரும் போட்டுக் கொண்டு விட்டார்கள். இவர் என்ன செய்யப் போகிறார்?

3. வன்முறைப் பேச்சு. 'வாழை மட்டையை வைத்து அடிப்பேன்; திருக்கை வாலை  வைத்து அடிப்பேன்' என்கிறார். இவர் ஆட்சிக்கு வந்தால் அரசு நடக்குமா கசாப்புக் கடை நடக்குமா?

4. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது; நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக் கொள்வது. ஈவேரா, நாத்திகம், இந்து மதக் கடவுள்கள், நம்பிக்கைகள், ஊழல் இவை எல்லாவற்றையும்  பற்றி வெவ்வேறான கருத்துக்கள். முரண் பேச்சுக்கள்.

5. ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசிக்கொண்டு உட்கட்சி சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துவது. அவர் கட்சியில் சமீபத்தில் நடந்த ராஜிநாமாக்களை உற்று கவனிக்கும் எவரும் இதை உணர்ந்து கொள்ள முடியும்.

6. தமிழன் தான் ஆள  வேண்டும் என்கிறார். தமிழன் யார் என்பதற்கான வரையறையை யார் வைத்திருக்கிறார்கள்? தமிழ் சரித்திரத்தில் பேரரசுகளை நிறுவ அரசர்கள் கொண்ட மண  உறவுகளில் சுத்த தமிழ் இனம் என்பது என்றோ அழிந்து விட்டது. அப்படிப் பார்க்கும் போது கடை ஏழு வள்ளல்கள் காலம் மட்டுமே தமிழர் காலம் என்று நாம் கொண்டாட முடியும்.

7. இந்தியக் கலப்புப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ளாது வேளாண்மை, கல்வி, மருத்துவம் போன்றவை பற்றி வெற்றுத் திட்டங்களை சாத்தியமா என்று யோசிக்காமல் அடித்து விடுவது.


மேற்கூறியவற்றால் நாம் இவரை நிராகரிக்க வேண்டி இருக்கிறது. இவருக்கு இந்தத் தேர்தலில் பெரிய வெற்றி வாய்ப்பு இல்லை தான். ஆனால் இவருக்கு கிராமப்புற  இளைஞர்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவு கவலை அளிக்கக் கூடியது.


இந்த விதத்தில் பார்க்கும் போது இவர் நம் கவுண்ட் டவுனில் பத்தாம் இடத்தில் இருக்கிறார்.



சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...